ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்: பிரேமலதா பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை வெளியிட வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம்: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினை மூடக்கோரி குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த 4 மாதங்களாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான கடந்த செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறியது.
இந்தப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேரும், மறுநாள் மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் கொல்லப்பட்டனர். போலீஸாரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம், மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் தேமுதிக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்தில் தேமுதிக தலைவர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
அதேபோல, காஞ்சிபுரத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்ததிற்கு பிறகு பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் ஊடுருவியதாலே துப்பாக்கி சூடு நடந்ததாக தமிழக முதல்வர் கூறுகிறார். சமூகவிரோதிகள் ஊடுருவியது உண்மை என்றால் இறந்தவர்களுக்கு எதற்காக அரசு நிவாரணம் கொடுக்கவேண்டும்? ஸ்டெர்லைட் ஆலையின் பங்குதாரர்கள் திமுக-வும் அதிமுக-வும். ஆனால் தற்போது மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.
திமுகவினர் போராட்டம் என்பது கண்துடைப்பு மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என தமிழக அரசு அரசாணை வெளியீட வேண்டும். அப்போதுதான் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் உடல்களை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வோம் என உறுதியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.