மேயர் தேர்வு முறையை மாற்றுவது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் - முத்தரசன்
சென்னை: சட்டசபையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு ஜனநாயக விரோதச் செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடியாகத் தேர்தல் நடத்தும் முறை மாற்றப்பட்டு, மறைமுகத் தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநகர மேயர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறையை ரத்து செய்து, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்க வழிவகை செய்திடும் வகையில் சட்டத் திருத்தம் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோத மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றோம்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயகம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு பகிரங்க சந்தை வியாபாரமாக ஆக்கப்பட்டது, இதன் விளைவாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வட்டார ஊராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யும் முறை உருவாக்கப்பட்டதால் பேரத்திற்கும், கடத்தலுக்கும், மிரட்டலுக்கும் வழிவகை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், மாநகராட்சித் தலைவரை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக, மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய அரசு மேற்கொள்ளும் முயற்சி அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும். சட்டசபையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயக விரோதச் செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாமென தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.