அமைச்சர் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்து உள்ளார்.
Recommended Video

ஈரோடு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று காங்கிரஸ் விழா ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கோபி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசுகையில், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்வதிலேயே குறிக்கோளாக உள்ளார். நாட்டு மக்களின் கஷ்டங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் மக்கள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க முடியாமல் துன்பம் அனுபவித்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி போன்ற வரிகளை விதித்ததால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக எம்.பி.,க்களும் தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. இங்கு இருப்பதோ ஓட்டை உடைசல் பேருந்துகள் தான். ஆனால், பேருந்து கட்டணம் விஷம் போல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படியே போனால் விரைவில் மக்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பேருந்து கட்டண குறைப்பு என்பது கண் துடைப்பு வேலை. மீண்டும் அரசு பேருந்துகளில் பழைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியடைவார்கள்.
தமிழகத்தின் அரசியல் சூழல் மோசமடைந்து வருகிறது. பல அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி வருகிறார்கள். கோபியைச் சேர்ந்தவர் தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அவர் எந்த அரசியல் கேள்விக்கும் சரியாக பதில் கூறமாட்டார். ஏனென்றால் அவருக்கு அரசியல் தெரியாது என்று இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications