அடுத்த பட்டாசை வெடிக்க விட கட்சிகள் தயார்... இன்னும் சில மாதங்களில் வருகிறது உள்ளாட்சித் தேர்தல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் என்ற அணுகுண்டு வெடித்து இப்போதுதான் ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பட்டாசு வெடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதுதான் உள்ளாட்சித் தேர்தல்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்தேர்தல் நடந்தது. இதன் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்டசபைத் தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என மொத்தம் 1,32,458 பதவிகள் உள்ளன.

2011ல் 2 கட்ட தேர்தல்
2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதில் அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. அதேபோல பெரும்பாலான பதவிகளையும் கூட அதிமுகதான் கைப்பற்றியது.

இந்த முறை எப்படி இருக்கும்?
ஆனால் இந்த முறை அப்படி அதிமுக மொத்தமாக அள்ளுமா என்பது சந்தேகம்தான். காரணம், அதற்கு கிட்டத்தட்ட சமமான நிலையில் திமுகவும் உள்ளதால் மாநகராட்சிகளையும், பிற பதவிகளையும் பிடிக்க கடும் போட்டி நிலவும் என்றே தெரிகிறது.

அதிமுக - திமுக
சட்டசபைத் தேர்தலைப் போலவே சில இடங்களை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்து விட்டு பெரும்பாலான இடங்களில் அதிமுக களம் இறங்கும் என்று தெரிகிறது திமுக, காங்கிரஸுடன் இணைந்து களம் இறங்கும் என ஏற்கனவே தெரிவித்து விட்டது.

மக்கள் நலக் கூட்டணி
மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணியின் உத்தி தெரியவில்லை. தேமுதிக, தமாகாவின் நிலைப்பாடும் புரியவில்லை. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தனது பூர்வாங்க பணிகளைத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications