ரூ.1800 கோடி செலவில் சாலை மேம்பாடு, திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம்: ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1800 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
சட்டசபையில் ஜெயலலிதா இன்று விதி எண் 110ன்கீழ் கூறியதாவது: பாதுகாப்பான போக்குவரத்திற்கும், வேகமான பொருளாதார வளர்ச்சிக்கும், ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது சாலைக் கட்டமைப்பு என்பதால், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் 18,056 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 10,490 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 1,855 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின் வரும் சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
திருவண்ணாமலை கோயிலில் தற்போது பக்தர்கள் கிரிவலம் யாத்திரை செல்லும் பாதை 7 மீட்டர்கள் அகலம் கொண்டதாக உள்ளது. அது ரூ.65 கோடி செலவில் 10 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படும். பக்தர்களுக்கு, தங்கும் வசதிகளும் செய்துதரப்படும்.
சேலம், வேலூர், கோவை, கடலூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் ரூ665.36 கோடி செலவில், புதிய சாலை மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைத்துக் கொடுக்கப்படும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, தற்போது ஒதுக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் கோட்டங்களில் செயல்படுத்தப்படுவதை தொடர்ந்து, நடப்பாண்டில் திருவள்ளூர் கோட்டத்தில் செயல்படுத்தப்படும். 485 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகளும், 278 கிலோ மீட்டர் நீள மாவட்ட முக்கிய சாலைகளும்; 680 கோடிரூபாய் மதிப்பில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.
ஒரகடம் தொழிற்பூங்கா பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கபெருமாள் கோயில் திருப்பெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோயில் முதல் ஒரகடம் வரை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதின் படி இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இதன் தொடர்ச்சியாக வண்டலூர் முதல் ஒரகடம் வரையிலான நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இப்பணியில் 3.8 கிலோ மீட்டர் நீள படப்பை புறவழிச் சாலை உள்ளிட்ட 20 கிலோமீட்டர் நீளச் சாலை அமைக்கப்படும். இவை 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
பெரிய தெற்கத்தியச் சாலையில் கிலோ மீட்டர் 32/4ல் வண்டலூர்- - மாம்பாக்கம்- கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ஓர் உயர்மட்டப் பாலம் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
சென்னை பெருநகர பகுதிகளில், உள்வட்ட சாலையில் கொளத்தூர் பகுதியில் இரட்டை ஏரி அருகில், பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில் 52 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் இடதுபுற சாலையில் மேம்பாலப் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகின்றது. இரண்டாம் கட்டமாக, வலதுபுறச் சாலையில் மேம்பாலப் பணி நடப்பாண்டில் 2015--16-ல் 35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும். இந்த அறிவிப்புகள் சாலை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்த வழி வகுக்கும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.