என்ஜீனியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
சென்னை: என்ஜீனியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். ஒருவார கால நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 570 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 60 மையங்களில் கடந்த 3 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 20 ஆம் தேதி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விண்ணப்பம் வழங்கும் காலமும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் காலமும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (27-ந் தேதி) கடைசி நாளாகும். இன்று மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாலை 6 மணி வரை பெறப்படும்.
என்ஜீனியரிங் படிப்பில் சேருவதற்கு 24 ஆம் தேதி வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 144 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதுவரை ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் வழங்கியிருந்தனர்.
கடைசி நாளான இன்று, விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், என்ஜீயரிங் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள 570 என்ஜீனியரிங் கல்லூரிகளில் 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.