சேலத்தில் இளைஞரிடம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
சேலம்: சுயமாக கடலை எண்ணெய் ஆலை தொடங்கிய இளைஞரிடம் அனுமதி வழங்கவும், மின் இணைப்பு வழங்கவும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி அதிர்வாலைகளை ஏற்படுத்தியது. லஞ்சப் புகாரின் பேரில் இளைஞரிடம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளர் உட்பட 4 மின் வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுத்து நொந்து போன இளைஞரின் பெயர் சுரேந்திரன். சேலம் சீலநாயக்கன்ப்பட்டி அருகே நாழிக்கல் பிரிவுரோடு பகுதியில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், கடலை எண்ணெய் ஆலையை தொடங்க விரும்பினார். இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டார். ஆனால் அதிகாரிகள் யாரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பணம் கொடுத்தால் பணி நடக்கும் என்ற நிலை ஏற்படவே வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் சுரேந்திரன்.

விற்பனை வரி அதிகாரிகள் தொடங்கி, மின் இணைப்பு வழங்க லஞ்சம், மானியம் இருக்கிறதா என்று பார்த்து சொல்ல லஞ்சம் என பட்டியல் நீண்டது. ஒவ்வொருக்கும் லஞ்சம் கொடுத்து அதை சாமர்த்தியமாக பதிவு செய்து கொண்டார். அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோவை சுரேந்திரன் பகிரங்கமாக வெளியிட்டார்.
இந்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானதோடு அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலை எண்ணெய் தயாரிக்கும் ஆலையை தொடங்குவதற்கு 5 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் தன்னிடம் ரூ.14 ஆயிரத்து 500 வரை லஞ்சம் பெற்றதாகவும், அதை செல்போனில் படம் பிடித்து ஆதாரத்துடன் வைத்திருப்பதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார் சுரேந்திரன்.
இந்தநிலையில், கடலை எண்ணெய் ஆலை தொடங்குவதற்கு சுரேந்திரனிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? யார்? அவர்கள் எந்த துறையில் பணியாற்றி வருகிறார்கள்? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, அவர் தான் தொடங்க இருக்கும் எண்ணெய் ஆலைக்கு மின் இணைப்பு கேட்டு மல்லூர் துணை மின் நிலையத்தை அணுகியதாகவும், இதுதவிர, உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட தொழில் வளர்ச்சி கழகம், வேளாண்மை ஒழங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த ஆதாரங்களை அவரிடம் இருந்து வாங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சுரேந்திரனிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உதவி செயற்பொறியாளர் வேணுகோபால், இளநிலை பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications