தொடங்கியது விசிக மது ஒழிப்பு மாநாடு.. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று திமுக கூறியிருந்தது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சில சமயங்களில் கூட்டணி கட்சிகள் கூட மது ஒழிப்பு குறித்து தீவிரமாக பேச தொடங்கின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்கோர் செய்ய நினைத்த விசிக, மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்தது. மட்டுமல்லாது மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது.

இந்த மாநாட்டில் அதிமுக பங்கேற்கப்போவதில்லை என்பது இரண்டாவது விஷயம். ஆனால், அதள பாதாளத்தில் இருந்த அதிமுகவுக்கு விசிகவின் அழைப்பு 2026 தேர்தல் கூட்டணிக்கான கிரீன் சிக்னலாக தெரிந்தது. திமுகவுக்கும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிக்கு திருமா அடிபோடுகிறார் என்று உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை வெளிப்படுத்தன தொடங்கினர். இந்த கருத்தை உறுதி செய்வதை போல, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று விசிக பேச தொடங்கியது.
எல்லாவற்றையும் பார்த்த திமுக, இதற்கு மேல் விட்டால் வேலைக்கு ஆகாது என்று உடனடியாக உதயநிதியை துணை முதல்வராக்கியது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திருமா, தனது டோனை கொஞ்சம் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் இன்று உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய நிர்வாகியான ஆனி ராஜா, சிபிஎம் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணை தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இன்று மாலை 4 மணியளவில் மாநாடு நடந்தது. மாநாட்டை விசிக மகளிர் அமைப்பு நடத்தியது.
விசிக மாநாடு காரணமாக, கூட்டணி கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறதே, ஆளும் கட்சி என்ன செய்யப்போகிறது? என்று கேள்விகள் திமுகவை நோக்கி எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர்கள், தேசிய அளவில் மது ஒழிப்பு சாதியமாகட்டும், இங்கும் சாத்தியப்படுத்துகிறோம் என்று சிம்பிளாக கூறிவிட்டனர்.
ஆக இந்த மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் சலசலப்புகளுக்கு மத்தியில்தான் இன்று இந்த மாநாடு நடந்து முடிந்துள்ளது. திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications