பேச்சுவார்த்தைக்கு இன்று நல்ல நாளாம்.. பேசலாமாம்.. சொல்கிறார் சிவி சண்முகம்!
பேச்சுவார்த்தைக்கு இன்று நல்ல நாள் என வைத்திலிங்கம் கூறியதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி அணியினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இதனை காப்பாற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியும் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்தது.

பேச்சால் ஏற்பட்ட தடை
ஏற்கனவே இந்த இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முரணாக பேசியதால் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தடை பட்டது.

கேள்விக்குறியாக இருந்தது
இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.

இன்று நல்ல நாள்
இந்நிலையில் அதிமுகவின் அணிகளும் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது, முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம் இன்று நல்ல நாள், சுபமுகூர்த்த தினம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என வைத்தியலிங்கம் கூறியதாக தெரிவித்தார்.

சசிகலா பேனர் அகற்றம்
இன்று நல்லநாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதகா அவர் கூறினார். டிடிவி தினகரன் கைதுக்கும் சசிகலாவின் பேனர் அகற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் டிடிவி தினகரனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications