ஒகேனக்கலில் அருவிகளில் தண்ணீர் வரத்து ஜோர்.. சுற்றுலா பயணிகள் குஷி
ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலம் ஒகேனக்கல். எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி பகுதிகள் கடந்த சில மாதங்களாக வெறும் பாறைகளாகக் காட்சி அளித்தது.
இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகல் ஏமாற்றமடைந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் சுத்தமாக நின்று போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.