எதிர்பார்த்தபடியே.. திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.
சென்னை : திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.
கருணாநிதி மறைவை அடுத்து திமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றார். அவருடன் கழகத்தின் முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதன்மை செயலாளர் யார்?
இதையடுத்து முதன்மை செயலாளர் பதவியானது காலியாகவே இருந்து வந்தது. அந்த முதன்மை செயலாளர் பொறுப்பில் நீடிப்பது யார்? முதன்மை செயலாளர் பொறுப்பையும் சேர்த்து துரைமுருகனே கவனிக்கிறாரா? அல்லது பொருளாளர் பொறுப்பை மட்டும் கவனிக்கிறாரா? என்பது தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்தது. மேலும், அப்படி முதன்மை செயலாளர் பொறுப்பில் வேறு ஒருவர் அமர வைக்கப்பட்டால் அது யாராக இருக்கும்? என்ற பேச்சும் திமுகவில் நிலவி வந்தது.
[Read This: சட்டென்று மாறுகிறதா தமிழக அரசியல் வானிலை? ]
கழக நிர்வாகிகள் கருத்து
முதன்மை செயலாளர் பதவி என்பது பொருளாளருக்கு மேலான பதவி. அதனால் நிச்சயம் துரைமுருகன் அளவுக்கு ஈடாகவோ அல்லது மேலும் அனுபவம் வாய்ந்தவராகவோ இருக்கும் ஒருவருக்குத்தான் இந்த பதவியை அளிக்க முடியும் என்றும் கழக நிர்வாகிகள் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
ஸ்டாலின் முற்றுப்புள்ளி
அதற்காக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரது பெயர்களும் முதன்மை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் எ.வ.வேலுவுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், இதுபோன்ற அனுமானத்திற்கெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டி.ஆர்.பாலு நியமனம்
அதன்படி டி.ஆர்.பாலுவை முதன்மை நிலைய செயலாளராக நியமித்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசியல் அனுபவம் நிறைந்த டி.ஆர்.பாலுவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.