திடீர் பிரேக் போட்டதால் குப்புறக் கவிழந்த லாரி.. சாலையில் ஆறாக ஓடிய பாமாயில்.. நெல்லையில் பரபரப்பு
திடீரென பிரேக் போட்டதால் பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் சாலையில் பாமாயில் ஆறாக ஓடியது.
திருநெல்வேலி: வல்லநாடு அருகே லாரி ஒன்று கவிழ்ந்ததால் பாமாயில் ஆறாக சாலையில் ஓடியது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி மல்லங்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவன குடோனில் இருந்து 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட 400 டின் பாமாயில் மற்றும் ஏராளமான அட்டை பெட்டிகளில் பாமாயில் பாக்கெட்டுகள் லோடு ஏற்றி கொண்டு அம்பைக்கு புறப்பட்டார். வல்லநாடு அருகே வசவப்பபுரம் பகுதியில் லாரி வந்த போது திடீரென ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது லாரி மோதாமல் இருக்க செந்தில் முருகன் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதில் நிலை தடுமாறிய லாரி, சாலையில் குப்புறக் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரியில் இருந்து 50 டின் பாமாயில் உடைந்தது. இதனால் சாலையில் பாமாயில் ஆறாக ஓடியது. மேலும், ஏராளமான எண்ணெய் பாக்கெட்டுகளும் கிழிந்து சாலையில் கொட்டியது.
சாலையில் எண்ணெய் கொட்டியது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கீழே விழுந்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து எண்ணெய் படலத்தை அகற்றினர். மேலும் குளோரின் பவுடரையும் தூவினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.