கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தால், பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் டிராபிக் நெரிசல்
கிருஷ்ணகிரி: தனியார் பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே இன்று மதியம் நடந்துள்ளது. இந்த கோர விபத்து காரணமாக, ஒசூர்-கிருஷ்ணகிரி நடுவே தேசிய நெடுஞ்சாலை-7ல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை எண்-7ல், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம் சுமார் 3 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

கிருஷ்ணகிரி-ஒசூர் நடுவே இயக்கப்படும் தனியார் பஸ் மற்றும் கார் மீது எதிரே வந்த லாரி அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதிய இந்த சங்கிலி தொடர் விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டது. சம்பவ இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.

இந்த விபத்தால், பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை-7ல் சம்பவ இடத்திலிருந்து இருபுறமும் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
பஸ்-லாரி இரண்டுமே அப்பளம் போல நொறுங்கியிருந்ததாலும், உடல்கள் சிதறி கிடந்ததாலும், பிற வாகனங்களால் அந்த பகுதியை கடக்க முடியவில்லை. சுமார் 2 மணிநேரம் கடந்த பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு பிற வாகனங்களின் போக்குவரத்து தொடங்கியது.
ஒருசில தனியார் வாகனங்கள், தகவல் கேள்விப்பட்டு, ஒசூரிலிருந்து ராயக்கோட்டை வழியாக கிருஷ்ணகிரிக்கு சுற்றிக்கொண்டு சென்றன. காஷ்மீர்-கன்னியாகுமரியை இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச்-7ல் அமைந்துள்ள இப்பகுதியில் தினசரி 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணம் மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications