சென்னையில் ஒரு மழை நேரத்து ”டிராபிக் ஜாம் இரவு”
சென்னை: பெய்து வரும் கன மழையால் "தலைநகர்" சென்னையும், சென்னைவாசிகளும் படும் பாட்டை சொல்லி மாளாது.
அதிலும் நேற்று காலையில் ஹப்பா வெய்யில் அடிக்குது என்று கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டால் மதியமே எங்கடா என்கிட்டயா என்று அடித்து துவைக்க ஆரம்பித்தது மழை.
சின்னாபின்னமாக்கிய மழை:
இதில் பெரும் பிரச்சினையாக நேற்று பல நாட்களுக்கு பின்னர் அலுவலகம் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் பேய்மழையால் டிராப்பிக்கில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டார்கள்.
வெள்ளாக்காடான சாலைகள்:
அண்ணாசாலை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி நூறடி சாலை, அடையாறு - திருவான்மியூர் சாலைகள் என்று மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைவெள்ளக்காடாய் மாறிப்போயின. அதே போல சென்னைப் புறநகர்ப் பகுதிகளும் இந்தத் துயரத்திலிருந்து தப்பவில்லை.
நெரித்துத் தள்ளிய டிராபிக்:
மாலை 6 மணியளவில் ஆரம்பித்த இந்த வாகன நெரிசல் இன்று அதிகாலை 2 மணியளவில் கூட குறையவில்லை. பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளும், சென்னைவாசிகளும் சமூக வலைதளங்களில் பொங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் சிலரின் பதிவுகள் இங்கே...
பயத்தைக் கொடுக்கிறது மழை:
உமாநாத்# அலுவலகத்தின் கீழ்தளத்தில் இருந்து வெளியில் கார் வந்ததும் வானத்தில் டமார் என்று ஒரு சத்தம். வானம் பிளந்து கொள்ளும் காட்சி. எங்கோ அருகில் இடி விழுந்திருக்க வேண்டும். இத்தனைக்கு மணி 5.23 தான். பேய் மழை. அந்த பயங்கர காட்சியை பார்த்த நடுக்கம் வீடு சேர்ந்தவரையில் நிற்கவே இல்லை. மழை அத்தனை பயத்தினை முதல்முறையாக கொடுக்கின்றது. முன்னே எந்த வாகனமும் இல்லை என்றாலும் அத்தனையும் மெதுவாக ஊர்ந்தே சென்றன. போரூர் சிக்னலில் இருந்து மில்லிமீட்டர் மில்லிமீட்டராக நகர்ந்தன.
படகாய் மாறிய பைக்:
கார்த்திக்# வழக்கமாய் அலுவலக வாசலில் கிக்கரை உதைத்தால் அடுத்த இருபது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன். இன்றைக்கு சுமார் மூன்றரை மணி நேரம் ஆனது.அதுவும் நீர்மூழ்கிப் (பைக்கில்) படகில் ; இரண்டாவது கியரிலேயே.
மழை செய்கிறது
அருண்# சென்னைவாசிகள், "மழை பெய்கிறது" என்று சொல்வதைக் காட்டிலும், "மழை செய்கிறது" எனச் சொல்வதே சரியாக இருக்கும்.
ஹேண்ட் பிரேக்கே சரணம்:
ஷான்# வேளச்சேரி நோக்கிய எனது பயணம் தொடங்கியது. கத்திப்பாராவின் இடதுபுற சாலையில் வெள்ளம் சூழ்ந்திருக்க எச்சரிக்கை உணர்வின் காரணமாக பாலத்தில் ஏறினேன். ஒரு சுற்று வந்து பார்த்தால் ஒலிம்பியா நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாலத்தின் மத்தியில் உறைந்து நின்றன. ஒரு கால் கிலோ மீட்டரில் நான் இறங்க வேண்டிய பாதை காலியாக இருந்தது. காரை நிறுத்தி ஹேண்ட் பிரேக் போட்டு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகு வாகனங்கள் மெல்ல அசைந்தன.
இங்கும் பெய்யும் மழை:
இது வெறும் சாம்பிள்தான்... மழை ஒரு பக்கம் கொட்டினால், மீம்களும், ஸ்டேட்டஸ்களுமாக பேஸ்புக்கிலும், சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாட்களாக "மழை..மழை...மழை மட்டுமே"... ஹலோ இது என் சொந்த கருத்துங்கோ!