அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு... ஆனா வேலை?
கோவை: வேலை தர்றாங்க... வேலை தர்றாங்க... என்று யாராவது சொன்னாலே போதும் படித்து விட்டு வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் பட்டதாரிகள் உடனே சர்டிபிகேட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிடுவார்கள். அரசே நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் என்றால் விடுவார்களா? அப்படி நம்பித்தான் கோவைக்கு படையெடுத்தார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையில் இடியை இறக்கியிருக்கின்றனவாம் வேலைக்கு தேர்வு செய்த நிறுவனங்கள். வேலைக்கான பணி நியமன உத்தரவு கிடைத்தும் வேலைக்கான உறுதி கிடைக்காத காரணத்தால் செய்வதறியாது திகைக்கின்றனர் பட்டதாரி இளைஞர்கள்.
கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டது. 2008ல் தொடங்கி 2010 வரை பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களில் பணிகள் வழங்கப்பட்டன. 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் இந்த வேலைவாய்ப்பு முகாமை கையில் எடுத்தது.
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2016 வரை ஸ்ரீரங்கம் தொடங்கி ஈரோடு பெருந்துறை, சேலம் எடப்பாடி, ஆர்.கே.நகர், கோவை உள்ளிட்ட பல சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர்கள் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் தொடங்கி, ஆர்.கே.நகர் வரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் பற்றி பல்வேறு சர்ச்சைகளும், புகார்களும் எழுந்த நிலையில் சமீபத்தில் கோவையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
சேலத்தில் போலீஸ் தடியடி
கடந்த ஆண்டு சேலம் எடப்பாடியில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம் சரியான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வரிசையில் செல்வதற்கு கூட வழியில்லாமல் கூட்ட நெரிசல் ஏற்படவே இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். அப்போதே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது இளைஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் கோவையில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமும் மக்களின் முகச்சுழிப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் பிரம்மாண்டம்
ஸ்ரீரங்கத்தில், 2011ல் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது அரசு. 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரிலும் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதுதவிர சில மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்திருந்தாலும், அவையெல்லாம் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகரைப்போல பிரம்மாண்டமாக நடக்கவில்லை. ஆனால், கோவையில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
எங்கெங்கும் ஜெ. மயம்
கடந்த 10ம் தேதி கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமிற்காக மாநகராட்சியின் பல பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளிலும், உக்கடம், பேரூர் பைபாஸ் சாலைகள், பஸ்ஸ்டாண்ட் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு அதிமுக மாநாடு போல நடத்தப்பட்டது.
தனியார் நிறுவனங்கள்
சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூரைச் சேர்ந்த 500க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளன. 5ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரையிலான கல்வித்தகுதி கொண்ட 25ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வேலை கிடைக்குமா?
வேலை வாய்ப்பு முகாமில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் அனைத்திலும் ஜெயலலிதாவின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. முகாமினை காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலுமணி. 9.30 மணிக்குள் 2000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் ப.மோகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் வழங்கினர். பணி நியமன ஆணை கொடுத்தது எல்லாம் சரிதான் ஆனால் பணி கிடைக்குமா என்பதுதான் இப்போது கேள்வியாகும்.
சம்பளம் ரூ. 6000
திருப்பூர் பனியன் கம்பெனிகள் உள்ளிட்ட சிறிய நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆட்களை எடுத்தன. பட்டம் படித்தவர்களுக்கே 5 ஆயிரம், 6 ஆயிரம் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது வேலைக்கு சேரவேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லையாம். பணி நியமனம் செய்யப் படாத பலருக்கு வெறுமனே ஆணை மட்டும் வழங்கப்பட்டதாகவும் அந்த ஆணையில் இறுதிகட்ட நேர்முகத்தேர்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாம்.
உள்ளவங்களுக்கே வேலையில்லை
திருப்பூரில் ஆர்டர்கள் குறைந்து இருக்கும் ஊழியர்களுக்கே வேலை கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவக்ளுக்கு எப்படி பணியும், சம்பளமும் கொடுக்க முடியும் என்பது தனியார் நிறுவனங்களின் கேள்வியாக உள்ளது. என்ன செய்வது எல்லாம் அமைச்சர் கொடுத்த நெருக்கடியால் ஆட்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது என்கின்றன தனியார் நிறுவனங்கள்.
10,155 பணி நியமன ஆனை
வேலைவாய்பு முகாமில் 461-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுதாரர்களும் கலந்துகொண்டனர். இதில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான கடிதங்களும் வழங்கப்பட்டன. 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகள் என மொத்தம் 25,596 பேர் பயன்பெற்றுள்ளதாக சொல்கிறது அரசின் அறிக்கை.
எல்லாம் ஒரு விளம்பரம்
தேர்தல் வரப்போகுதுல்ல மக்கள் நம்மளை மறந்துருவாங்க. அதனால நம்ம முகத்தை அவங்க கிட்ட காட்டிக்கிட்டே இருக்கணும் என்று கூறும் அரசியல்வாதிகள் அவ்வப்போது கட்சித்தலைமையை கவரவும் இதுபோல விளம்பர ஸ்டண்ட் அடிக்கின்றனர். தங்களின் வளர்ச்சிக்காக இப்படி இளைஞர்கள் வாழ்க்கையிலா விளையாடுவது என்பது சமூக நல ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
விளம்பர பேனரை எடுக்கலையே
முகாம் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் கோவையில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்ட தினத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களோடு தற்போது முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து தொடர்பான விளம்பர பேனர்களும் மாநகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வருவதும் பொதுமக்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாம்.