கருப்பு ஆடை அணிந்து தலைமை செயலகம் சென்ற திருநங்கை... திருப்பி அனுப்பிய போலீஸ்
தலைமை செயலகத்திற்குள் கருப்பு சட்டை அணிந்து சென்ற திருநங்கை கிரேஸ் பானுவை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே விட மறுத்து விட்டனர்.
சென்னை: சென்னை தலைமை செயலகத்திற்குள் கருப்பு சட்டை அணிந்து சென்ற காரணத்தால் திருநங்கை கிரேஸ் பானுவை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அலுவலகத்திற்குள் விட மருத்து திருப்பு அனுப்பியுள்ளனர்.
இதனை தனது முகநூல் பக்கத்தில் கோபத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நேற்று தலைமைச் செயலக வாயலில் எனக்கேற்பட்ட கசப்பான உணர்வு என் இரவு உறக்கம் அனைத்தையும் மிச்சம் வைக்காமல் விழுங்கிவிட்டது.சமூக நலத்துறை அமைச்சரிடம் என் சமூகத்திற்கான சில சலுகை கோரிக்கைகளை எடுத்தியம்பி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து வர திருநங்கை தோழிகளுடன் நான் நேற்று தலைமைச் செயலகம் சென்றிருந்தேன்.
கருப்பு நிற ஆடை அணிந்திருப்பதாகக் கூறி நான் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டேன்..! கேவலமான,மடத்தனமான,மூட புத்தியுள்ள இந்த அரசாங்கத்தை எதிர்த்து அங்கேயே தர்ணா அமர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆரவாரமாய்,அடிமைப் புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கும் அமைச்சர்களின் அருள் பார்வைக்கு முன்னால் என் ஒடுக்கப்பட்ட பாலினத்தின் சிறு சலுகை கோரிக்கையை முன் வைப்பதே பெரும்பாடாயிற்றே...!
அதனால் காரியம் தடைபடக் கூடாது என நினைத்து மற்ற திருநங்கை தோழிகள் அமைச்சரைப் பார்க்கச் சென்றனர். "காரியம் பெரிதா...! வீரியம் பெரிதா...! எனும் சொல்லடை சில நேரங்களில் அதிகாரத்திளுள்ளவர்களும் பல நேரங்களில் அடக்கப்பட்டவர்களும் பயன்படுத்தக் கூடியது.பல நேரங்களைப் போலவே நேற்றும் அதே சொல்லடையைப் பயன்படுத்தி காரியமே பெரிதெனக் கருதி வீரியத்தை ஒரு பெரும் காயமாய் மனதினுள் மறைத்து வைத்தேன்..!
அதிகாரத்திலுள்ள அந்த கனவான்களுக்கு கருப்பு நிறத்தைக் கண்டால் மட்டும் பிரச்சனயல்ல போராடும் வீரிய மாணுடத்தைக் கண்டாலும் பிரச்சனை.! ஏனெனில் 2013 ஆண்டு அக்டோபரின் ஒரு நாளில் வெள்ளை நிற உடை அணிந்துதான் நானும் என் திருநங்கைத் தோழிகளும் சென்றோம் அப்போதும் தடுத்து நிருத்தப் பட்டோம். ஆனால் இப்போது போலல்ல அப்போது எதிர்த்துப் போராடினோம் தாக்கப்பட்டோம் கைது செய்யப்பட்டோம் !
அரசின் இத்தகைய மடத்தனங்களை எதிர்த்து போராட்ட வடிவங்களால் எவ்வளவோ எதிர் வினைகளை செலுத்தினாலும் எப்போதும் அது செக்காகவே கிடக்கிறது.!
அண்ணல் அம்பேத்கர் அன்றே கூறியது போல் "சட்டம் எவ்வளவுதான் நன்மை பயப்பதாக இருப்பினும் ஆட்சி புரிபவர்கள் மோசமானவர்களாக இருப்பின் அச்சட்டத்தினால் பயனேதுமில்லை" என்றார்.! மீண்டுமொருமுறை அவர் வார்த்தையை சட்டமன்ற வாயலகத்திற்கு முன்னால் நான் நினைத்துப் பார்த்தேன் ! எவ்வளவு மோசமானவர்களாக இந்த ஆட்சியாளர்கள் கிடக்கிறார்கள்.
சட்டத்தில் சொல்லப்படாத தன் மூட விருப்பங்களை எதனடிப்படையில் இவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள்.! அரசியலமைப்பின் அடிப்படைகளை தன் சொந்த விருப்பங்களுக்காக மாற்றியமைத்து ஆட்சி புரிகிறவர்கள் குற்றவாளியில்லையா..! என்று கேட்டுள்ளார் கிரேஸ் பானு.
கடந்த 15 ஆண்டுகளாகவே கறுப்பு சட்டை அணிந்து வருபவர்களை தலைமை செயலகத்திற்குள் போலீசார் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.