தேர்தல் களத்தில் குதித்தார் திருநங்கை கல்கி.. விழுப்புரத்தில் போட்டி
விழுப்புரம்: திருநங்கை கல்கி தேர்தல் களத்தில் குதித்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான திருநங்கையரில் கல்கியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே வசித்து வருகிறார். சகோதரி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நர்த்தகி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பியவர் ஆவார். இவர் விழுப்புரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதுகுறித்து கல்வி கூறுகையில், நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் எம்.ஏ. முதுகலை பட்டமும், சிதம்பரம் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன்.
சமூக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக நான் ஈடுபடுவதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.வருகிற தேர்தலில் போட்டியிட விழுப்புரம் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு கேட்டேன்.
திருநங்கையான என் மீது அனைவரும் அன்பு கொண்டுள்ளனர். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். விழுப்புரத்தை தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்வேன் என்றார்.