கும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்
கும்பகோணத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடத்தில் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழியர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளகூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 4500 பேருக்கும், கோவையில் 11819 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோண கோட்ட மேலாளர் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் 2100 பேரிடம் விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.