தினகரன் ஒரு செல்லாத 1000 ரூபாய் நோட்டு... அவர் எடப்பாடியை நீக்குவதா?... திருச்சி எம்பி பொளேர்
தினகரன் ஒரு செல்லாத ரூ.1000 நோட்டு. அவருக்கு எடப்பாடியை பதவியிலிருந்து நீக்க எந்த உரிமையும் கிடையாது என்று திருச்சி எம்பி குமார் கடுமையாக சாடினார்.
திருச்சி: தினகரனே ஒரு செல்லாக் காசு, அவருக்கு எடப்பாடியை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று திருச்சி எம்பி குமார் விமர்சித்துள்ளார்.
பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அன்று அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. அந்த இணைப்பு நிகழ்ச்சியில், விரைவில் பொதுக் குழுவை கூட்டி சசிகலாவை நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து மூத்த நிர்வாகிகளுக்கு ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட கட்சிப் பதவிகளை பறித்த தினகரன், அவர்களுக்கு பதிலாக தன் தரப்பு ஆதரவாளர்களை நியமித்தார்.
இந்நிலையில் அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி எம்பி குமாரை நேற்று அதிரடியாக நீக்கினார் தினகரன். அப்போது தைரியம் இருந்தால் முதல்வரின் கட்சி பதவியை தினகரன் நீக்கட்டும் என்று சவால் விடுத்தார்.
அந்த சவாலை ஏற்கும் விதமாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடியை இன்று தினகரன் நீக்கி உத்தரவிட்டார். இதுகுறித்து திருச்சி எம்பி குமார் தெரிவிக்கையில், தினகரன் ஒரு செல்லாத 1000 ரூபாய் நோட்டு.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரனுக்கு எடப்பாடி பதவியை பறித்தது செல்லாது. 10 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இல்லாத தினகரனுக்கு யாரையும் நீக்க தகுதி இல்லை. விட்டால் பிரதமர் மோடியையும் நீக்குவார் என்றார் குமார்.