2 ஆண்டுகளைத் தாண்டியும்.. இன்னும் பிடிபடாத திருச்சி ராமஜெயம் கொலையாளிகள்....?
திருச்சி: திருச்சியில் கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகளைத் தாண்டியும் கூட இன்னும் ஒரு கொலையாளி கூட பிடிபடாமல் இருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாதவரை கொலையாளிகளின் நிழலைக் கூட யாருமே கண்டு கொள்ள முடியாது என்ற முனுமுனுப்பும், அதிருப்தியும் எழுந்துள்ளது.
ஆனால் சிபிஐ விசாரணை கோரி திமுக தரப்பும் சீரியஸாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேருவின் நிழல்
அண்ணன் நேருவின் நிழல் போல இருந்தவர் ராமஜெயம். நேருவின் பல வேலைகளை இவர்தான் கவனித்து வந்தார். அரசியல் தொடர்பானது மட்டுமல்லாமல், தனிப்பட்ட தொழில்களுக்கும் ராமஜெயம்தான் நேருவின் மூளையாக இருந்து வந்தார்.
ராமஜெயத்தின் வளர்ச்சியால் ஓரம் கட்டப்பட்ட நெப்போலியன்
ராமஜெயம் தலையெடுப்பதற்கு முன்பு வரை அவரது உறவினரான நடிகர் நெப்போலியன்தான் நேருவின் நிழலாக இருந்து வந்தார். ஆனால் ராமஜெயத்தை முழுமையாக தனது நம்பிக்கைக்குரிய தளபதியாக நேரு வரித்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் நெப்போலியன் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.
படுவேகமான வளர்ச்சி
நேரு வட்டாரத்தில் அவருக்கு அடுத்து இவர்தான் என்று ஆன பின்னர் ராமஜெயத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. பல்வேறு தொழில்களிலும், முதலீடுகளிலும் இறங்கினார். மிகப் பெரிய நபராக சீக்கிரமே உருவெடுத்தார். முதலில் ராமஜெயத்தைப் பார்த்தால்தான் நேருவை அணுகமுடியும் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டார்.
சர்ச்சைகள்
அதேபோல பெரும் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கியவர் ராமஜெயம். ஒரு கொலை மற்றும் தற்கொலை விவகாரத்தில் இவரது பெயர் பெரிய அளவில் அடிபட்டது. கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களிலும் சிக்கினார். நில அபகரிப்பு புகார்களிலும் சிக்கினார்.
கடத்திக் கொலை
இந்த நிலையில்தான் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி காலையில் வாக்கிங் போன ராமஜெயம் கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் ராமஜெயம்.
இதுவரை ஒரு தடயம் கூட கிடைக்காத ஆச்சரியம்
இந்தக் கொலை வழக்கை முதலில் உள்ளூர் போலீஸார் விசாரித்தனர். ஆனால் துப்பு கிடைக்கவில்லை. பின்னர் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. சிலருடைய பெயர்களும் அடிபட்டன, பெண் விவகாரம் என்றார்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. இதுவரை யாருமே சிக்கவில்லை.
ரங்கனுக்கே வெளிச்சம்
2 ஆண்டுகளைக் கடந்தும் கூட யாரும் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூட, 'ராமஜெயம் கொலைக்குக் காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அது ஏன் என்பது ரங்கநாதருக்கே வெளிச்சம் என்று கூறியிருந்தார்.
சிபிஐக்குப் போனால்தான்
எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளி வரும். குற்றவாளிகளும் சிக்குவார்கள். அந்த நடவடிக்கையை திமுகதான் எடுக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு எழுந்துள்ளது.
எத்தனையோ வழக்குகளை சடுதியில் கண்டுபிடித்து முடிக்கும் சாதனைக்குரிய தமிழக காவல்துறை, ஏன் இப்படி மிகப் பெரிய வழக்குகளில் சொதப்புகிறது என்பது புரியாத புதிர்தான்.