நல்லகண்ணு கோரிக்கையால் 8 நாள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற திருச்சி கல்லூரி மாணவர்கள்!
திருச்சியில் 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
திருச்சி : நீட் தேர்வுக்கு தடை கோரி கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்த மாணவர்களை அரசியல் மூத்தத் தலைவர் நல்லகண்ணு சந்தித்து போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதையடுத்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு பொடுக்க போராட்ட்ம முடிவுக்கு வந்தது.
அரசுகள் நடவடிக்கை தேவை
இதையடுத்து மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : தாழ்த்தப்பட்ட சமுதாய்ததை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு முறையான நீதி வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரம் இருந்து வந்தார்கள். அவர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்த்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கண்டனம்
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அரசு காவல்துறையினரை வைத்து மிரட்டுவது கண்டனத்திற்கு உரிய செயல். தங்களின் உரிமைகளுக்காகவே மாணவர்கள் போராடுகின்றனர்.
போராட்டம் வாபஸ்
திருச்சியில் 8 நாட்களாக இந்த மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வருத்திக்கொண்டு மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டு கொண்டதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
13ந் தேதி அறவழிப் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 13-ந்தேதி நடைபெறும் அறவழி போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். சமூக நீதியை வென்றெடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறவழி போராட்டம் நடைபெறும், என்றும் அவர் கூறினார்.