ஆசியாவில் முதன்முறையாக ஸ்ரீரங்கத்தில் “வண்ணத்துப்பூச்சிகள்” பூங்கா – 9 கோடி ரூபாயில் உருவாக்கம்!
திருச்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரூபாய் 9 கோடி செலவில் தமிழக அரசு வனத்துறையால் அமைக்கப்பட்டு வருகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடையே இயற்கை எழில் கொஞ்சும் சூழல் கொண்ட திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் அணைக்கரை அருகே காவிரிக்கரையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் அமைக்கப்படும் என்று 2 ஆண்டுகள் முன்பு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. 60 சதவீத பணிகள் நடைபெற்றுவிட்டது.
பூச்செடிகள் வளர்ப்பு:
பூங்காவில் பல்வேறு வகை பூச்செடிகள், புல்தரைகள், நவீன ரக மரங்கள், அழகுச் செடிகள், வண்ணத்துப்பூச்சிக்கு உணவான காட்டாமணக்கு செடிகள் உள்பட பல்வேறு பூச்செடிகள், மரங்கள் போன்ற பலவகை தாவரங்கள் நடப்பட்டுள்ளன.
பட்டாம்பூச்சிகளின் தோட்டம்:
சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்கோப்பியா உள்ளிட்ட அதிக பூக்கள் பூக்கும் செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
நவீன இனப்பெருக்க முயற்சிகள்:
வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்கம் செய்யும் வகையில் நவீன வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தத்ரூபமான கல்மரங்கள்:
பூங்காவில், இரும்பு தகடுகளால் வண்ணத்துப்பூச்சி வடிவில் செயற்கையாக செய்யப்பட்ட உருவமும், கல்மரமும், வண்டுகள் உள்ளிட்ட பூச்சி வகைகள் செயற்கை கல்மரத்தில் மொய்க்கும் வகையில் அழகிய வேலைப்பாடுடன் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைமுறை:
நுழைவுவாயிலில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளையும், அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கப்படங்கள் அமைக்கப்படவுள்ளது.
நட்சத்திர வனம் அமைப்பு:
27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை அமைத்து நட்சத்திர வனம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது.
ஆசியாவில் முதன்முறை:
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரம் என்ற சிறப்பைப் பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ள பெருமையையும் ஸ்ரீரங்கம் பெறுகிறது.
வாசனை திரவியம்:
ஸ்பிரே தெளித்தால் மொய்க்கும் பூங்கா பயன்பாட்டிற்கு வந்ததும் பூங்காவில் நுழையும் சுற்றுலா பயணிகள் மீது ஒரு வித வாசனை திரவியம் ஸ்பிரே செய்யப்பட உள்ளது.
பூச்சிகளுடன் புகைப்படம்:
அதன் நறுமணத்திற்கு வண்ணத்துப்பூச்சிகள் உடம்பில் தொற்றிக் கொள்ளும். அதை புகைப்படம் எடுத்துக் கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. ஊட்டியைப் போலவே ஸ்ரீரங்கத்திலும் மலர் கண்காட்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளது.