கூவத்தூர் கூத்தை மீண்டும் அரங்கேற்றப் போகும் டிடிவி தினகரன்... அதிமுகவில் அடுத்த பிரளயம்
தினகரன் கெடு நெருங்கும் நிலையில் மீண்டும் கூவத்தூர் கூத்து அரங்கேறும் வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: அதிமுகவில் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைக்க கூவத்தூர் கூத்து மீண்டும் அரங்கேறலாம் என்று பேசப்படுகிறது. இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இடையேயான அதிகாரப்போருக்கானதாக இருக்கும் என்கின்றனர்.
அ.தி.மு.க. அம்மா அணி இரண்டாக உடைந்து ஈபிஎஸ், தினகரன் அணியாக உள்ளது. அதிமுக துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன், கட்சிகளை இணைக்க கொடுத்த முடிந்து விட்டதால் ஆகஸ்ட் 5 முதல் கட்சிப்பணியாற்றப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
கட்சியை வலுப்படுத்த துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கப் போவதாக கூறியுள்ளார். இது ஈபிஎஸ் அணியினருக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணிகள் இணைப்பில் முன்னேற்றமில்லை
இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றாக இணைக்க இருதரப்பிலும் தலா ஏழுபேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. நக்கல் நையாண்டி பேச்சுக்களால் இணைப்பு சாத்தியமில்லாமல் போனது.
ஒதுக்கி வைத்த அமைச்சர்கள்
ஓபிஎஸ் அணியின் கோரிக்கைப்படி அதிமுக அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. கூடிப்பேசிய அமைச்சர்களோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறினார்கள்.
கெடு விதித்த தினகரன்
திகார் சிறைக்கு செல்லும் முன் கட்சியை விட்டு ஒதுங்குவதாக கூறிய தினகரன், திகார் சிறையில் இருந்து வந்த பின்னர் தீவிரமாக கட்சிப்பணியாற்றப்போவதாக கூறினார். அணிகளை இணைக்க 60 நாட்கள் கெடுவும் விதித்தார்.
அதிமுகவில் பரபரப்பு
தினகரன் கொடுத்த கெடு முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. கட்சிப்பணியாற்ற ஆகஸ்ட், 5ஆம் தேதி மீண்டும் வருகிறேன்' என்று டி.டி.வி. தினகரன் அறிவித்திருக்கிறார். தினகரனின் இந்த அறிவிப்பால் மீண்டும் அதிமுக கட்சி அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
அதிரடி ஆலோசனைகள்
ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என மாறி மாறி ஆலோசனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லாமே கட்சியையும், ஆட்சியையும் காப்பற்றத்தானே ஒழிய மக்களுக்காக இல்லை.
அமைச்சர்கள் ஈபிஎஸ் பக்கம்
முதல்வர் ஈபிஎஸ் அணியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 80க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதே போல டிடிவி தினகரன் பக்கம் 40 எம்எல்ஏக்கள் வரை உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை காப்பாற்ற 117 எம்எல்ஏக்கள் தேவை.
மீண்டும் கூவத்தூர் கூத்து
பிப்ரவரி 7 ஆம் தேதி அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது எம்எல்ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்து வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இப்போது அதே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கூவத்தூர் கூத்தை மீண்டும் அரங்கேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பவும், இப்பவும்
அன்று சசிகலாவிற்காக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டு போய் அடைத்து வைத்தார் டிடிவி தினகரன். இன்று தனது பதவிக்காக, கட்சியில் தனது செல்வாக்கை அதிகரிக்க எம்எல்ஏக்களை கடத்த வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால் ஈபிஎஸ் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தமாட்டார் என்றும் கூறி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
ஆட்சிக்கு ஆபத்தா?
கட்சியை கைப்பற்றுவதுதான் டிடிவி தினகரனின் முதல் குறிக்கோள். அதன்பின்னர் ஆட்சியை வசப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார். ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்குள் அடியெடுத்து வைக்கப் போகும் தினகரனால் அதிமுகவில் பிரளயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.