"அண்ணன் தம்பிகள்" இணைகிறார்களாம்.. அமைதியாக ஒதுங்குவாரா தினகரன்?
சென்னை: அண்ணன் தம்பி என்று மாறி மாறி ஓ.பி.எஸ்ஸையும், எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவின் இரு அணிகளும் புகழ ஆரம்பித்து விட்டதால், டிடிவி தினகரன் விரைவிலேயே கட்சியை விட்டு விலகுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு மேலும் அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரின் பிடி இறுக்கமாக இருக்க முடியாத சூழல் உருவாகி விட்டது. காரணம், பெரும்பாலான அமைச்சர்கள் மனம் மாறி விட்டனர்.
தினகரனிடமே இதை தம்பித்துரை நேரில் கூறி விட்டதாக தெரிகிறது. அவருக்கு எதிரான சூழல் வலுத்து வருவதை தினகரனே கூட உணர ஆரம்பித்து விட்டார்.
கதை முடிந்தது
கிட்டத்தட்ட அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் முடியப் போகிறது என்று சொல்கிறார்கள். அண்ணன் தம்பிகள் என்று ஓ.பி.எஸ், எடப்பாடி தரப்பினர் பேச ஆரம்பித்து விட்டனர். நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்றும் கூறத் தொடங்கி விட்டனர்.
சசிகலா - தினகரன் விலக வேண்டும்
இவர்கள் ஒற்றுமையாக இருக்க பெரிய இடைஞ்சலே சசிகலா குடும்பம்தான். சசிகலா பொதுச் செயலாளராக இருக்கிறார். தினகரன் துணை பொதுச் செயலாளராக இருக்கிறார். இருவரும் விலக அடுத்த நெருக்குதல் கிளம்பும் எனத் தெரிகிறது.
இருவரும் விலகுவார்கள்
இதனால் இருவரும் தத்தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஓடுவார்கள் என்றே தெரிகிறது. மேலும் தினகரனும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எனவே அவர் சித்தி சசிகலாவைப் போல சிறையில் அடைக்கப்படுவார்.
கைதுக்கு முன் சசிகலாவை சந்திக்க மும்முரம்
ஆனால் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது சித்தி சசிகலாவைப் பார்க்க துடிக்கிறார் தினகரன். அதேசமயம், தினகரனை சந்திக்க சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் நேற்று முழுவதும் பெங்களூருக்குப் போய் காத்திருந்து வெறும் கையுடன் சென்னை திரும்பினார் தினகரன்.
பார்க்கலாம் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று!