தினகரன் அணியில் குடுமிபிடி சண்டை... நாஞ்சில் சம்பத், புகழேந்தி "டிஷ்யூம் டிஷ்யூம்"!
வருமான வரி சோதனை பற்றி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி எதிர் எதிர் கருத்துகளைக் கூறி குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை : சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பற்றி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி குடுமிப்பிடி சண்டை போட்டு பேட்டியளித்துள்ளளனர்.
நவம்பர் 9ம் தேதி முதல் 13 தேதி வரை சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று ரெய்டில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவருமே சொல்லி வருகின்றனர். ஆனால் யாரை மையமாக வைத்து ரெய்டு நடத்தப்பட்டதோ அவர்கள் அதாவது விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் வருமான வரி சோதனை வழக்கமானது தான். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்துள்ளோம் என்று கூலாக பதில் சொல்கின்றனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று ஒரு புது குண்டை தூக்கி வீசினார். அப்போது வருமான வரி அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் சரிபார்க்கவில்லை, அவர்கள் முழுக்க முழுக்க சிடி எங்கே சிடி எங்கே என்று தான் கேட்டார்கள் என்று கூறினார். அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்ததாக சொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியைத் தான் அதிகாரிகள் கேட்டதாக திவாகரன் கூறினார்.

மத்திய அரசு நெருக்கடி
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி மணக்காவிளையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் அணியைச் சேர்ந்த அதிமுக அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சசிகலா குடும்பத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை என்னும் நெருக்கடியை மத்திய அரசு தருவதாகக் கூறினார். தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதற்கான ஒத்திகை நடக்கிறதோ என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறினார்.

தேவையில்லாத கதை
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி வருமான வரித்துறையினர் தங்களின் கடமையைத் தான் செய்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சொல்வது போல சிடி எங்கே என்றெல்லாம் அதிகாரிகள் கேட்கவில்லை, தேவையில்லாத பின்னோட்ட கதைகளை புனையக்கூடாது.

ஏன் சிடி கேட்கப்போகிறார்கள்?
வருமான வரி சோதனை நடைபெற்றதாக சொல்லலாம், ஆனால் சிடி கேட்டார்கள் என்று ஏன் சொல்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வருமான வரி அதிகாரிகள் ஏன் சிடி கேட்கப் போகிறார்கள் இப்படி சொல்வது சரியானதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஏன் ஜெயா டிவியில்?
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்டவற்றை குறி வைத்து ரெய்டு நடத்தியது தவறு. அதோடு ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ஏன் அவர்கள் நோக்கமாக வைத்தார்கள் என்பது தான் கேள்வி. என்னைப்பொருத்தவரை என்னிடம் சிடி கேட்கவில்லை, மற்றவர்களிடமும் கேட்டதாக நான் கேள்விப்படவில்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சோதனையால் பிளவு
வருமான வரி சோதனை பற்றி திவாகரனே சிடி தான் கேட்டார்கள் என்று கூறி இருந்த நிலையில், அவரை சாடும் வகையில் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தினகரன் அணியினர் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவது அப்பட்டமாக வெளிவந்துள்ளது.












Click it and Unblock the Notifications