அதிமுகவின் முகமாக மாறத் துடிக்கும் தினகரன்...கைவசம் வைத்துள்ள அடேங்கப்பா பிளான்?
டிடிவி தினகரன் சிறை செல்வதற்கு முன் இருந்த அதே அந்தஸ்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக தெரிகிறது.
சென்னை: அதிமுகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தனக்கே இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி டிடிவி.தினகரன் காய்களை நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் சசிகலா முடிவெடுக்கும் அதிகார மையமாக வந்ததால் மன்னார்குடி கும்பல் குஷியானது. அப்போதும் சசிகலாவை இயக்கியது தினகரன் மற்றும் திவாகரன் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த சந்தோஷம் உச்சநீதிமன்றத்தின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால் பறிபோகும் நிலை வந்தததும் அதிகார மையம் தினகரன் கைக்கு மாறியது.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கட்சியினர் மத்தியில் நல்ல பெயர் சம்பாதித்து வந்ததோடு அவரின்றி கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்ற நம்பர் ஒன் ஆளாக இருந்தார். ஆனால் கட்சியின் சின்னமும், பெயரும் பறிபோய்விடும் என்று சில அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தன் பேரில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தினகரன்.

சீண்டாத அதிமுகவினர்
எனினும் தினகரனுக்கு ஆதரவாகவே அதிமுக அம்மா அணியினர் செயல்படுகின்றனர் என்பது ஆணித்தரமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறை சென்ற ஒரு மாதத்தில் அனைத்தும் தலைகீழாகிவிட, தற்போது தினகரனை அதிமுக அம்மா அணி அமைச்சர்கள் சீண்டுவதாக தெரியவில்லை.

குடைச்சல் ஆரம்பம்
இதனால் கடுப்பான தினகரன் தான் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஒரு பக்கம் தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து முதல்வர் பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாகவே தனது ஆதரவு 34 எம்எல்ஏக்களை அனுப்பி நேற்று முதல்வரிடம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தனது தலைமையில் நடத்த வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஓட்டு வேண்டுமா, வேண்டாமா?
இதோடு நின்று விடாமல் முதல்வர் பழனிசாமி ஆட்சியை பாஜக விட்டு வைத்திருப்பதற்கு முக்கிய காரணமான குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது 34 எம்எல்ஏக்களின் ஓட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டுமெனில் தினகரன் தான் கட்சியை தலைமை தாங்குவார், அதில் யாரும் தலையிடக் கூடாது என்றும் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுகவின் முகமாக மாற ஆசை
கோஷ்டிகள் இணைப்பிற்காக விலகுகிறேன் என்று தினகரன் சொன்னதும், அதிமுகவை ஒன்று சேர்த்து அனைவரையும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தில் தானாம். அதிமுகவின் முகம் என்றால் அது தானாகத் தான் இருக்க வேண்டும் என்பது தான் தினகரனின் மாஸ்டர் பிளானாம். இதற்கான காய் நகர்த்தல்கள் தான் தற்போது அரங்கேறி வருவதாகவும், விரைவில் அதிமுக அரசியலில் மிகப்பெரிய ஆட்டத்தை தினகரன் ஆட உள்ளதாகவும் விவரமறிந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications