அதிமுகவின் பிக்பாஸ்... டிடிவி தினகரனின் அடுத்த பிளான் - எகிறும் எதிர்பார்ப்பு
ஆட்சி யார் கையில் வேண்டுமானாலும் இருக்கட்டும், அதிமுகவின் பிக்பாஸ் நான்தான் என்று அடித்துச்சொல்கிறார் டிடிவி தினகரன்.
சென்னை: அதிமுகவை கைப்பற்ற தீவிரமாக காய் நகர்த்தி வரும் டிடிவி தினகரன், நான் தான் துணைப்பொதுச்செயலாளர், என்னை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பிக்பாஸ் ஆக பேசி வருகிறார்.
கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி நன்றாக செயல்படுத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி வந்தாலும், கட்சி தங்களின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் டிடிவி தினகரன்.
பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சி அலுவலகத்திற்கு தான் செல்வேன் என்று கூறினார். ஆனால் எப்போது செல்வேன் என்று கூறவில்லை. இதுவே ஈபிஎஸ் அணியினருக்கு திக் திக் சமாச்சாரம்தான்.
கட்சி சரியில்லை
3 மாதம் கட்சியை நம்பி ஒப்படைத்தேன். ஆனால் கட்சி கட்டுப்பாடாக இல்லை என்பதுதான் டிடிவி தினகரனின் கருத்து. எனவே கட்சி வலுப்படுத்த வேண்டிய கடமை துணை பொதுச்செயலாளரான தனக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறியுள்ளார் தினகரன்.
டிடிவி தினகரன் பிளான்
ஆகஸ்ட் 5 முதல் கட்சியை கவனிக்கப் போவதாக தினகரன் கூறினாலும், கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கப் போகிறாராம். பின்னர்தான் கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆடி போயி ஆவணி வரட்டும்
இது ஆடி மாதம் என்பதால் மீண்டும் கட்சி அலுவலகம் செல்ல நல்ல நாள் பார்த்து வருகிறார். அது ஆகஸ்ட் 15க்குப் பிறகுதான் ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறக்கிறது. எனவே கட்சி அலுவலகத்திற்கு தினகரன் இப்போதைக்கு வரமாட்டார் என்பதே ஈபிஎஸ் அணிக்கு சற்றே ஆறுதல் தரும் செய்திதான்.
எடப்பாடி பழனிச்சாமி
கடந்த 6 மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மனதில் தன் முகத்தை பதியவைத்து விட்டார். அவரது செயல்பாடு கட்சிக்காரர்களுக்கு ஓரளவிற்கு பரிட்சயமாகிவிட்டது. எனவேதான் ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி நன்றாகவே செயல்படுகிறது என்று கூறி வருகின்றனர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்.
முதலில் கட்சி அப்புறம் ஆட்சி
இப்போதைக்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் திட்டம், சில மாதங்களுக்குப் பின்னரே ஆட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று நினைக்கிறாராம். தனக்கு தோதான ஒருவரை முதல்வராக்கும் எண்ணமும் டிடிவி தினகரன் கையில் இருக்கிறதாம்.
அதிமுகவின் பிக்பாஸ்
எது எப்படியோ அதிமுகவின் பிக்பாஸ் தான்தான் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினருக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். தன்னுடைய அடுத்த கட்ட காய் நகர்வுகளை அதற்கேற்றார் போல தொடங்கி விட்டார் டிடிவி தினகரன் என்று கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.