"அக்யூஸ்ட் நம்பர் 1" ஜெயலலிதா.. தினகரன் அதிரடி தாக்கு!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் ஏ1 என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் ஏ1 (குற்றவாளி 1). மற்றவர்கள் 3 பேரும் அவருடன் இருந்தவர்கள் மட்டுமே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என 187 இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்களும், தங்க நகைகளும், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன.
டிடிவி தினகரனுக்கு சொந்தமான புதுவை பண்ணை பங்களாவில் ரெய்டு நடந்தபோது , ரெய்டு நடப்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும் பண்ணை வீட்டில் சாணமும், உரமும்தான் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அச்சத்தின் காரணமாக...
ரெய்டு குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என கிருஷ்ணபிரியா கூறியது அச்சத்தின் காரணமாகத்தான். ஆனால் உள்நோக்கம் இல்லை என்று விவேக் கூறியதாக நான் டிவியில் பார்க்கவில்லை.

பாகுபலி போல் பிரமாண்டம்
சொத்துக்கள் இருந்ததால் தான் சோதனை நடத்தப்பட்டது என்பது பொய்.... பாகுபலி போன்ற பிரமாண்டத்தைக் காட்டவே இத்தனை இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மற்றவர்கள் கூடயிருந்தவர்கள்
எங்களுக்கு ஏராளமான சொத்துகள் ஏற்கெனவே இருந்தன. ஜெயலலிதாவை முன்னிறுத்தி நாங்கள் எதையும் சம்பாதிக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கை எடுத்துக் கொண்டால் ஜெயலலிதாதான் முதன்மை குற்றவாளி, அதாவது ஏ1. மற்றவர்கள் அவருடன் இருந்த காரணத்தினாலேயே தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். எனவே அரசியல் என்பது சதி நிறைந்த துறை.

எங்கள் பரம்பரை பணக்காரர்கள்
நாங்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு முன்னரே எங்களுக்கு ஏராளமான சொத்து இருந்தது. நான் நல்ல மதிப்பெண் படிக்காவிட்டாலும் வெளிமாநிலத்தில் என்னை பொறியியல் கல்வி சேர்க்கும் அளவுக்கு எங்களுக்கு சொத்து இருந்தது. எங்கள் சித்தி சசிகலா வீடியோ காசட் கடை நடத்தவில்லை. அவருக்கு குழந்தைகள் இல்லாததால் வெளிநாடு சென்றபோது வீடியோ கேமராவை வாங்கி வந்தனர். அதற்கு விமான நிலையத்தில் ரூ.1.30 லட்சம் செலுத்தி வாங்கினர்.

நண்பருக்கு கடை ஏற்படுத்தினார்
பின்னர் பொழுதுபோக்கிற்காகவும், சசிகலாவின் நண்பருக்காகவும் அவர் காசட் கடை ஏற்படுத்திக் கொடுத்தார். எனவே மற்றவர்கள் கூறுவதைபோல் காசட் கடை வைத்து நடத்தியவர் சசிகலா அல்ல. எங்களுக்கு ஏராளமான சொத்துகள் அப்பவே இருந்தன. சித்தப்பா நடராஜனும் தமிழக அரசு ஊழியராவார்.

கோடிக்கணக்கில் போகிறது
ஜெயலலிதாவுடன் அறிமுகம் கிடைக்கும் முன்பே எங்களுக்கு ஊர்களில் நிலம் இருந்தன. எனவே நாங்கள் யாரும் ஒன்றுமில்லாதவர்கள் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. நாங்களும் தொழில் செய்து அதில் விருத்தி அடைந்தே இத்தனை சொத்துகள் உள்ளன. அன்றைய காலகட்டத்தில் கட்டிய வீட்டின் மதிப்பு லட்சக்கணக்கில் இருந்தது. இப்போது கோடிக்கணக்கில் போகிறது. அதற்காக எங்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்று கேட்பது எனக்கு புரியவில்லை.

வெளியிட மாட்டோம்
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது அவர் நைட்டி அணிந்து கொண்டு ஜூஸ் குடித்து கொண்டிருந்தார். அப்போது அதை புகைப்படமாக எடுக்குமாறு எனது சித்தியிடம் அவர் கூறியதால் மட்டுமே புகைப்படமும், வீடியோவும் எடுக்கப்பட்டது. மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்தும் வீடியோவாக எடுத்து வெளியிடுமாறு சித்தியிடம் கூறினேன். ஆனால் அவர்தான் வேண்டாம் என்றுவிட்டார்.

அசிங்கப்படுத்தக் கூடாது
அக்கா சாதாரண உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து என் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க கூடாது. அப்படி செய்தால் அக்காவை அசிங்கப்படுத்துவது போல் இருக்கும். அந்த வீடியோவை யாரும் பார்க்கக் கூடாது என்று சித்தி சசிகலா கூறினார் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications