தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு.. ஆக.3 முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை.. பிறகு தீர்ப்பு
சென்னை: தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கினார். சக நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு உள்நோக்கம் கொண்டது என்பதால், இந்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்பு வெளியானதையடுத்து, 3வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் 23ம் தேதி முதல், வழக்கு விசாரணை தொடங்கியது.
முதலில் தினகரன் தரப்பில் வழக்கறிஞர் ராமன் வாதிட்டார். இதன்பிறகு, சபாநாயகர் தரப்பில் இன்று மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதத்தை துவக்கினார்.
ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு வழங்கியது ஆட்சிக்கு எதிரான செயல் என்பதால் சபாநாயகர் நடவடிக்கை சரியானதே என்று அவர் வாதிட்டார். இதையடுத்து, இன்றுடன், 3 நாட்களாக தொடர்ந்த வழக்கு விசாரணையை, நீதிபதி சத்யநாராயணா ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஆகஸ்ட் 3, 6, 7ஆம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என நீதிபதி கூறினார். 5 நாட்கள் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.