சேகர்பாபு சொன்னதுதான் நடக்குது போல....ஆர்கே நகரில் திமுகவினரை பர்சேஸ் செய்ததா தினகரன் கோஷ்டி?
ஆர்கே நகர் தொகுதியில் திமுகவினரை வளைத்துப் போடுவதில் தினகரன் கோஷ்டி படுமும்முரமாக இருப்பது அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் பலரை தினகரன் கோஷ்டி பர்சேஸ் செய்துவிட்டதோ என அதிர்ச்சியடைந்து போயுள்ளதாம் அண்ணா அறிவாலயம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர் என்ற முழக்கத்துடன் வலம் வருகிறார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். மற்ற வேட்பாளர்களைப் போல அல்லாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
சுணக்கமும் இணக்கமும்
மருதுகணேஷ் இடைவிடாது பிரசாரம் செய்த போதும் திமுக நிர்வாகிகள் பலரும் இன்னமும் சுணக்கமாக இருப்பதாக திமுக தலைமை நியமித்த குழுக்கள் அறிவாலயத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாம். அதில் திமுக நிர்வாகிகள் சிலர் தினகரன் தரப்புடன் இணக்கமாக இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
எச்சரித்த சேகர் பாபு
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் பேசிய சேகர் பாபு, அதிமுக வாக்குகள் என்னதான் பிரிந்து கிடந்தாலும் நமக்கு அவை வரப்போவதில்லை. அதேநேரத்தில் நமது நிர்வாகிகள், வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.
வேறவழியே இல்லை
ஏனெனில் ஆர்கே நகரில் எப்படியும் வென்றாக வேண்டும் என நெருக்கடியில் களமிறங்கியுள்ளவர் தினகரன். தாம் வெல்வதன் மூலமே தமக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என நம்புகிறவர் தினகரன்.
எல்லோரையும் வளையுங்க..
இதனால் பணத்தை வாரி இறைத்து வருகிறது தினகரன் கோஷ்டி. அத்துடன் மதுசூதனன் மற்றும் திமுக அணி நிர்வாகிகளையும் வளைத்துப் போடுவதிலும் தனிக்கவனம் செலுத்துகிறதாம் தினகரன் கோஷ்டி.
வைட்டமின் 'ப'
அதே நேரத்தில் திமுக தரப்பில் இன்னமும் நிர்வாகிகளுக்கு கூட பணம் சப்ளை செய்யப்படாததால் கடும் சோர்வில் இருக்கிறார்களாம்.. இப்படிப்பட்டவர்களைத்தான் குறிவைத்து தினகரன் கோஷ்டி வளைத்துக் கொண்டிருக்கிறதாம். இந்த தகவல் அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.