தூத்துக்குடியில் கடைகளை நாளைக்குள் திறக்க துரித நடவடிக்கை.. கலெக்டர் நந்தூரி பேட்டி
தூத்துக்குடியில் கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி: கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக இன்று சந்தீப் நந்தூரி பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடியில் 13 பேரை பலி கொண்ட சம்பவத்துக்குக் காரணமான தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ்யும், எஸ்.பி மகேந்திரன் இருவரும் மாற்றப்பட்டனர்.
புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, எஸ்.பியாக முரளி ரம்பாவும் இன்று பதவியேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நத்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடியில் தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
அம்மா உணவகம்
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உணவு தேவைப்படுவோருக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்களுக்கு தட்டுப்பாடு
தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இதன்காரணமாக நாளைக்குள் கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் கடைகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அமைதி திரும்ப முக்கியத்துவம்
இதனிடையே அமைதி திரும்பினால் கடைகளைத் திறக்க கடைக்காரர்கள் தயாராக உள்ளனர். மேலும்
பலியானவர்கள் எண்ணிக்கை, விவரம் மாலையில் தெரிவிக்கப்படும். நகரில் அமைதி திரும்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
மாலையில் தெரிவிக்கப்படும்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி முரளி ரம்பா, தூத்துக்குடியில் இதுவரை எத்தனை பேர் கைது என்பது குறித்த முழு விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்.
அமைதி காக்க வேண்டும்
மக்களின் குறை தீர்க்க எஸ்பி அலுவலகத்தை எப்போதும் அணுகலாம். மக்கள் புகார் அளிக்க வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும். தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தாமல் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.