ஜிமிக்கி கம்மல் மெட்டில் டெங்கு விழிப்புணர்வு பாடல்
டெங்கு நோயை தடுக்கும் விதமாக செய்ய வேண்டியவை குறித்து தூத்துக்குடியை சேர்ந்த விழைவுப் பூக்கள் அமைப்பு பொதுமக்களுக்காக விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்குவை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதத்தில் விழைவுப்பூக்கள் என்ற சேவை அமைப்பின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சார பாடல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது, அதிலும் சிறு குழந்தைகள் டெங்கு நோய்க்கு பரிதாபமாக பலியாகி வருகின்றனர். இதனால் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விழைவுப் பூக்கள் அமைப்பை சேர்ந்த கவிஅன்பு என்பவர் டெங்கு விழிப்புணர்வு பாடலுக்கான வரிகளை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் முதல் பிரதியை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி வெளியிட அமைப்பின் நிறுவனர் பாலவிநாயகம் பெற்றுக் கொண்டார்.
டெங்கு அறிகுறிகள்
ஜிமிக்கிக் கம்மல் பின்னிசையில் ஒலிக்க டெங்குவின் அறிகுறிகள் என்ன என்பதில் தொடங்குகிறது பாடல். டெங்குவிற்கான அறிகுறிகள் என்ன என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதிக அளவு காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, கண்வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்றவை நோயின் அறிகுறிகள்.
கொசு வராமல் எப்படி தடுப்பது?
வீடுகளில் கொசு வராமல் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செரட்டை, முட்டை ஓடு, தென்னை மட்டை, டயர் இது போன்ற தண்ணீர் தேங்கும் பொருளை அப்புறப்படுத்த வேண்டும். அரளி நொல்லி முடக்கத்தான் மூலிகையில் புகை மூட்டம் போட்டு கொசு வராமல் தடுக்கலாம்.
இரண்டு வேளை மருந்து
காய்ச்சல் வந்தவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு கசாயம் காலை மாலை இரண்டு வேளையும் குடிக்கலாம். காய்ச்சலை மேலும் பரவாமல் தடுக்கலாம்.
விழிப்புணர்வு பாடல்
சுற்றுப்புறம் சுத்தமாக மாற வேண்டும், மக்கள் நலமாக வாழ வேண்டும். தடுக்கலாம் வா, தமிபி தடுக்கலாம் வா டெங்குவை தடுக்கலாம் வா என்று பாடல் முடிகிறது. இந்த இளைஞரின் விழிப்புணர்வுப் பாடல் முயற்சி பாராட்டிற்குரியதே.