அனுமதியின்றி வெடிபொருள் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிந்து கைது செய்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, துணை கண்காணிப்பாளர் கந்தசாமி, முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்&இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
உத்தரவின்பேரில், இந்த குழுவினர் முத்தையாபுரம் பகுதியில் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தையாபுரம் தோப்பு தெருவில் சந்தேகப்படும்படியாக கையில் சாக்குபையுடன் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த சாக்குபையை சோதனையிட்டபோது அதில், வானவெடி மற்றும் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் பட்டாணித்தேவர் உத்தரவின்பேரில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்து கோவில் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் பட்டாணித்தேவர் வீட்டில் சோதனையிட்டு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான வானவெடிகள், வெடிகுண்டு மற்றும் வெடிகள் தயாரிப்பதற்கான மருந்துபொருட்கள், அச்சு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பாக அழித்தனர்.
கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இடைச்சேரியை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை நேரில் பார்வையிட்டதுடன், பிடிபட்ட குற்றவாளி மாரியப்பனிடமும் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications