2014 பிளாஷ்பேக்: டிவி விவாதங்களில் அனலை கிளப்பிய செய்திகள்..
தொலைக்காட்சிகளில் இரவு நேரம் ஆனாலே விவாத நிகழ்ச்சிகள் என்ற பெயரில் எதையாவது பேசி சண்டை போடுவார்கள். வெட்டிப்பேச்சு விடிஞ்சா போச்சு என்பதுபோல புதிது புதிதாக பேசி பிரச்சினையை கிளப்புவார்கள். பிரச்சினையே இல்லை என்றாலும் இவர்களே உருவாக்குவார்கள்.
2014ஆம் ஆண்டில் 365 நாட்களிலும் தினசரி எதையாவது பேசி பேசி அலுத்து போனவர்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி, ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ஆகியோர் டிவி விவாத நிகழ்ச்சிகளில் அடிக்கடி மல்லுக்கட்டுவார்கள்.
2014 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு அதிகம் தீனி போட்டது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, தண்டனை, உச்சநீதிமன்றம் ஜாமீன், 5 மீனவர்கள் தூக்கு தண்டனை, 2ஜி வழக்கு, மோடி அலை, அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி, ஆகியவைதான் அதிகம் விவாதிக்கப்பட்டது, விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு ஊடங்களுக்கு அதிகம் தீனி போட்டார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2014ஆம் ஆண்டில் ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக அமைந்தது. 4ஆண்டு தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம் என செப்டம்பர் 27ஆம் தேதி நீதிபதி வாசித்த தீர்ப்பு பரபரப்பு தீயை பற்றவைத்தது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது எந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே அளவிற்கு அவருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதும் அதை தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு அக்டோபர் 17ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அன்றைய தினம் இரவுகளில் அனைத்து டிவிகளிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

அமைச்சர் ஸ்மிருதி இரானி
சின்னத்திரை நடிகையாக இருந்து அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டதால் ஓவர் நைட்டில் பிரபலமானார். தேர்தலில் தோல்வியடைந்தாலும் மோடி அமைச்சரவையில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அது முதல் அவருடைய கல்வித்தகுதி, அறிவிப்புகள் என ஒவ்வொன்றும் வட இந்திய ஊடகங்களிலும், தமிழக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகிவருகிறது.

ரஜினியின் அரசியல் பேச்சு
1996ஆம் ஆண்டு முதலே வருவார் வரமாட்டார் என்று ரஜினியின் அரசியல் பேச்சு பற்றி பேசப்படுகிறது. இந்த ஆண்டும், லிங்கா படத்தின் இசை வெளியீட்டின் போது அரசியலில் தனது நிலைப்பாட்டை உறுதிபட கூறினார் ரஜினிகாந்த். இது பதுங்கலா, அரசியலின் ஆழம் பற்றிய அச்சமா என்றெல்லாம் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

கிரானைட் முறைகேடு
தமிழகம் முழுவதும் நடைபெற்ற கனிமவள முறைகேடு,கிரானைட் கொள்ளை பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். தமிழக அரசு தேவையான அதிகாரிகளை நியமிக்காமலும் ஒத்துழைப்பு கொடுக்காமலும் இழுத்தடிக்கவே, அரசின் தலையில் குட்டிய நீதிமன்றம், 10000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அன்றைய தினம் ஊடகங்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமேயில்லை.

5 மீனவர்கள் விடுதலை
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அரசியல் கட்சியினரின் போராட்டத்தைத் தொடர்ந்து
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் விவகாரம் அன்றைக்கு மிகப்பெரிய அரசியலாக்கப்பட்டது. விவாதப்பொருளாகவும் அமைந்தது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் மண்ணை கவ்வ காரணமாக அமைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதோடு கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ.200 கோடி வந்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் ஊடகங்களில் விவாதப் பொருளாக இருக்கிறது.

மதிமுக விலகல்
2014 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆளாய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் துண்டு போட்ட வைகோ, டிசம்பரில் விலகினார். அவர் இணைந்த போது இது சரியா வருமா என்று விவாதம் செய்தவர்கள், கூட்டணியில் இருந்து வைகோ விலகிய உடன் நாங்கதான் முன்னாடியே சொன்னோமே என்றும் உட்கார்ந்து பேசினார்கள்.

ஸ்வேதா பாசு
பாலிவுட் பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது ஊடகங்களின் பரபரப்பு செய்தியானது. இதுவும் 2014ஆம் ஆண்டில் விவாத நிகழ்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தது.

எதுவுமே இல்லைன்னாலும்…
அதேபோல போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டமும் விவாத நிகழ்ச்சிகளில் பரபரப்பை கிளப்பியது
இதேபோல பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறது இலங்கை தமிழர்கள் பிரச்சினை, கூடங்குளம் அணுமின்நிலையம்... நாங்க பேசுவோம், பேசுவோம் பேசிக்கிட்டே இருப்போம் என்கின்றனர். நீங்க பேசுங்க பாஸ்...












Click it and Unblock the Notifications