மாண்ட விவசாயிகள் அனைவருக்கும் நிதி வழங்க கோரி சிதம்பரத்தில் நாளை போராட்டம்- வேல்முருகன்
வறட்சியால் விவசாயிகள் உயிரிழக்கும் தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வார்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
சிதம்பரம்: வறட்சியால் பாதித்த தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தியும் சிதம்பரத்தில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் மாநிலம் முழுவதம் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய பயிர்களை கண்டு மாரடைப்பிலும் கடன்தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டும் உயிரை மாய்த்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகள் தெரிவித்துள்ளார். இதில் மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அறிக்கை விடுத்துள்ளார். அதில்,
பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் நிலங்கள்
"150 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சியாலும் காவிரி நீரை திறந்துவிட மறுத்து வரும் கர்நாடகத்தின் வஞ்சகத்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழினத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்ததாலும் 250க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். முப்போக சாகுபடி நடைபெற்ற காவிரி டெல்டா விளைநிலங்களில் ஒருபோக சாகுபடிக்கும் வழியின்றி காய்ந்து பாளம் பாளமாக வெடித்து கிடக்கின்றன.
வரலாறு கண்டிராத துயரம்
எப்படியும் ஆறுகளிலும் வாய்க்காலிலும் காவிரி நீரும் மழைநீரும் வந்துவிடும் என பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி நாசமாகிப் போய்விட்டன. பாழ்பட்டு சாகுபடியை எண்ணி எண்ணி விவசாயிகள் வயல்வெளிகளிலேயே நெஞ்சு வெடித்து சாவதும் நஞ்சு குடித்து மரணிப்பதும் தமிழக வரலாறு இதுவரை கண்டிராதா பெரும் துயரம். இத்துயரைப் போக்க மத்திய, மாநில அரசுகள் உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கவலைப்படாமல் இருக்கும் மத்திய அரசு
வறட்சியால் ஒட்டுமொத்த தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டு ரூ39,565 கோடி நிவாரண நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ இதைப்பற்றி எந்த கவலையும்படாமல் மத்திய குழுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த மத்திய குழுவும் முறையாக வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடாமல் மேம்போக்காக மட்டுமே ஆய்வு செய்வது விவசாயிகளை பெரும் கவலைக்குரியதாக்கியுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கை கண்துடைப்பு
வறட்சி பாதிக்காத கர்நாடகாவும் கேரளாவும் நிதி கேட்கிற போது உடனே கொடுக்கின்ற மத்திய அரசு 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோன தமிழகத்துக்கான நிதியை தராமல் இழுத்தடிப்பது என்பது கடுமையான கண்டனத்துக்குரியது. அதேபோல் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோன நிலையில் வெறும் 17 விவசாயிகள் மட்டுமே இறந்ததாக அறிவித்து ரூ.3 லட்சம் மட்டுமே நிதி உதவி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்துடைப்பாகும்.
அனைத்து கடன்களையும் ரத்து செய்க
மாண்டு போன அனைத்து விவசாயிகள் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கிட வேண்டும்; விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் வீட்டு மாணவர்களின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஆகையால் மிகக் கொடூர வறட்சியை எதிர்கொண்டுள்ள தமிழகத்துக்கான நிவாரண நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், மாண்டுபோன விவசாயிகளின் குடும்பங்கள் அனைத்துக்கும் நிவாரண நிதியை தமிழக அரசு உடனே வழங்க வலியுறுத்தியும் சிதம்பரத்தில் ஜனவரி 28 ஆம் தேதியான நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைவரும் பங்கேற்க கோரிக்கை
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க, விவசாயிகளின் மரணங்களை தடுத்து நிறுத்திட நடைபெறும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.