கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான இரண்டு சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா. 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.
இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான சிறுமிகளில் ஒருவரின் பெயர் யுவஸ்ரீ மற்றொருவர் பாவனா என தெரியவந்துள்ளது. இருவரும் சகோதரிகள் ஆவர்.
மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆர்.ஆர். நகர் பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பலியான சிறுமிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மின் துறை அமைச்சர் தங்கமனி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
விசாரணையின் முடிவில், வியாசர்பாடி மின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் ஆகிய 8 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications