எடப்பாடி அணி குடுமி இனி ஓ.பி.எஸ்சிடம்! இரட்டை இலை தீர்ப்பில் தேர்தல் ஆணையம் சொன்னதை கவனித்தீர்களா?
Recommended Video

சென்னை: அதிமுக சின்னமான இரட்டை இலையை முதல்வர் அணிக்கு வழங்கியுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இதனால் அதிமுகவின் குடுமி இப்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்துள்ளது.
முதல்வர் பதவியை விட்டுத்தர சொன்ன, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' என்ற பெயரில் கிளர்ச்சி அறிவித்தார். மொத்தம் 11 எம்எல்ஏக்கள் இணைந்து சசிகலா கோஷ்டியை எதிர்த்தனர்.
இப்படி பன்னீர்செல்வம் கோஷ்டி தனியாக சென்றபோது, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சசிகலா ஆதரவாளர்களாக இருந்தனர்.

மதுசூதனன் வழக்கு
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் தேர்தல் ஆணையத்தை அணுகினார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என இரு பெயர்களில் கட்சி இயங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ரத்து
அம்மா அணி சார்பில் தினகரனும், புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் களமிறக்கப்பட்ட நிலையில், தினகரன் தரப்பினரின் பணப்பட்டுவாடாக்களால் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இணைந்த கோஷ்டி
இந்தநிலையில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு எடப்பாடி தனி அணியாக பிரிந்து சசிகலா கோஷ்டியை ஒதுக்கினார். பன்னீர்செல்வம் அணியை இணைத்துக்கொண்டு பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி அளித்தார். அதிமுக பொதுக்குழுவை இந்த இணைந்த கோஷ்டியினர் கூட்டி, பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடியை துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுத்தனர்.

மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை
தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி தரப்பை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்களும், ஓபிஎஸ் அணியுடன் இணைந்து மனு தாக்கல் செய்தனர். தாங்கள் ஒரே அணியாக மாறிவிட்டதால் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. அதையேற்றுதான் இப்போது மதுசூதனன் அணிக்கே இரட்டை இலை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓபிஎஸ் பிடியில் கட்சி
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பின்னர்தான் வழக்கில் இணைந்தனர். எனவேதான் வழக்கு தொடர்ந்த மதுசூதனன் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதுசூதனன் அணியை சேர்ந்த ஓபிஎஸ்தான் இப்போது அதிமுகவின் அதிகாரமிக்க ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ளார். எனவே கட்சி முழுக்க ஓ.பி.எஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இணைந்து செல்ல வாய்ப்பு
எடப்பாடி பழனிச்சாமி அணியினர், ஓபிஎஸ் அணியினரை புறக்கணிப்பதாக சில முனுமுனுப்புகள் எழுந்தன. எம்.பி மைத்ரேயன் கூட இதை மறைமுகமாக பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்போது குடுமி ஓபிஎஸ் அணி பக்கம் வந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி, இனிமேல் ஓபிஎஸ் அணியினருக்கு ஆட்சி, அதிகாரத்தில் தாராளம் காட்டுவார், இதனால் இரு தரப்பின் பனிப்போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications