சென்னை முஸ்லிம் லீக் நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்
சென்னை: முஸ்லீம் லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அக்பர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னைராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை லால்குண்டா பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி (33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த மாதம் 21ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
எனினும் குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அக்பர் அலியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ராயப்பேட்டை பேகம் தெரு முதல் லேன் பகுதியை சேர்ந்த சகாப்தீன் (37), அவரது நண்பர் மெகபூப் பாஷா (42) ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஏற்கனவே அக்பர் அலியை கொலை செய்ததாக இம்ரான்(28), சித்திக்(26), ஜாகீர்(23), ஜான்பாட்ஷா(26) ஆகிய 4 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.