செங்கல்பட்டில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயம்
காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு செங்கல்பட்டு அருகே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயமானார்கள்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை, காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடக மாறியுள்ளது. இரு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயமானார்கள். சாந்தாம்பாக்கம் அருகே ஆற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய வீட்டு காவலாளிகள் கிஷோர், ரவி ஆகிய இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான இருவரையும் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.