"தலாக்"... தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம்.. திருச்சி கூட்டத்தில் தவ்ஹீத் ஜமா அத் தீர்மானம்
தலாக் நடைமுறை தாய்க்குலத்திற்கு தற்காப்பு கவசம் என தவ்ஹீத் ஜமா அத் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
திருச்சி: தலாக் விவாகரத்து நடைமுறை தாய்க்குலத்திற்கு தற்காப்பு கவசம் என திருச்சியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமா அத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் கூறி திருமண உறவிலிருந்து ஆண்கள் விலகும் நடைமுறை உள்ளது. ஆனால், இது பெண்களுக்கு எதிரானது என்பதால் அந்த முறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் ஒரே சட்டமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசு, முஸ்லிம் பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தலாக்குக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, முதல் தீர்மானமாக, 'தலாத் என்பது தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம். ஆண்களைப் போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கியுள்ளதால், இஸ்லாம் பெண்களுக்கு அநீதி இழைக்கவில்லை' என இயற்றப்பட்டது.
மேலும், 'விவாகரத்திற்காக ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வதும் இந்த முறையில் தவிர்க்கப் படுவதாகவும்' இரண்டாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், விபச்சாரம் செய்வதைக் கொடிய தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து குடும்பப் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும், பல்வேறு வகையான மதம், இனங்களைக் கொண்ட நாட்டில் ஒரே போன்ற சிவில் சட்டம் என்பது சாத்தியமற்றது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.