அண்ணே உங்களுக்குத்தான் போட்டேன்.. வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்
திருப்பத்தூர்: வடிவேல் பட பாணியில் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிக்க வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நிலையில் 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைக்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
ஜாலி.. 12.01 மணிக்கு மதுபார்கள்.. சலூன்கள்.. 106 நாளுக்கு பிறகு தளர்வு, குஷியில் ஆட்டம்போடும் சிட்னி
வாக்கு எண்ணிக்கை
இந்த இரு கட்ட தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச் சீட்டு அளிக்கும் நடைமுறையே தற்போது உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குகளை வெள்ளை நிற வாக்குச் சீட்டிலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டிலும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் பதவிக்கு பச்சை நிறவாக்குச் சீட்டிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டிலும் வாக்களிக்க வேண்டும்.
அதிகாரி
இதில் திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது வார்டு எண் 1 இல் அளிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை எண்ணிய தேர்தல் அதிகாரிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த வார்டில் வாக்களித்த இருவர் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக பூத் சிலிப்பை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரி பூத் சிலிப்பை காட்டினார்.
வாக்காளர் அடையாள அட்டை
மேலும் அவர் கூறுகையில் யாரோ இருவர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஒருவேளை சினிமா படத்தில் வருவது தாங்கள் இருவரும் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என காண்பிப்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என்றார். இது போல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை, சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வடிவேல் வாக்குச் சாவடி
வடிவேல் படத்தில் ஒரு காமெடியில் ஒருவரிடம் தேர்தல் வேட்பாளர்கள் யாருக்கு ஓட்டு போட்டாய் என கேட்பார்கள். அதற்கு அவர் சத்தியமாக உங்களுக்குத்தான், சத்தியமா உங்களுக்குத்தான் என சொல்வார். இதையடுத்து வடிவேலுவும் அவரிடம் யாருக்கு வாக்களித்தாய் என கேட்பார். அதற்கு அந்த நபர் அண்ணே உங்களுக்குதான் போட்டேன் என்பார். அதற்கு வடிவேல் டேய் அவங்ககிட்டயும் இதையேதானே சொன்னே! நான் நம்ப மாட்டேன் என்பார். உடனே அந்த நபர் நீ நம்ப மாட்டேனு தெரிஞ்சிதான் நான் வாக்குச் சீட்டை எடுத்துனு வந்திருக்கேன் என கூறிவிட்டு வாக்குச் சீட்டை காண்பித்து பாருனே, தென்னமர சின்னத்துல குத்தியிருக்கேனா என்பார். இதை கேட்ட வடிவேலு அதிர்ச்சி அடைந்து பார்ப்பார். இந்த காமெடியை நினைவூட்டுகிறது திருப்பத்தூர் சம்பவம்.