"மங்குனி" என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபிக்கிறார் ரா. பாலாஜி... போட்டுத்தாக்கும் வைகைச் செல்வன்!
தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒருமுறை ராஜேந்திர பாலாஜி நிரூபித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தனியார் பால்நிறுவனங்கள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்த விவகாரத்தில் தினகரனின் ஆதரவாளரும், அதிமுக செய்திதொடர்பாளருமான வைகைச் செல்வனுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் முட்டிக் கொண்டது.
இந்த சண்டை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர்.
நேற்றைய விமர்சனம்
இந்நிலையில் தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். அப்போது வைகைச்செல்வனையும் சீக்கு வந்த பிராய்லர் கோழி அழுகிய தக்காளி என கூறினார்.
உளறிக்கொட்டுகிறார் அமைச்சர்
இந்நிலையில் இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக செய்தி தொடர்பாளரான வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ராஜேந்திர பாலாஜி உளறிக் கொட்டுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்
தனியார் பாலில் கலப்படம் என்று ஒருமனதாக கூறுபவர் ஓராண்டாக என்ன செய்தார் என்றும் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலை வாங்கலாமா, வேண்டாமா என்று மக்களை அச்சத்தில், பீதியில் ஆழ்த்திவிட்டார் அமைச்சர் என்றும் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
மங்குனி அமைச்சர்
எந்த பாலை வாங்க வேண்டும் எதை வாங்கக்கூடாது என ஏன் முன்னரே அமைச்சர் கூறவில்லை என்றும் அவர் விளாசினார். மேலும் ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருவதாகவும் அவர் கடுமையாக சாடினார்.