ஜெ. ஆட்சியில் ஆயா முதல் அதிகாரி வேலை வரை... “காசு... பணம்... துட்டு... மணி”: வைகோ குற்றச்சாட்டு
சேலம்: அதிமுக ஆட்சியில் ஆயா வேலை முதல் அதிகாரி வேலை வரை பணம் கொடுத்தால் மட்டுமே எதுவும் நடப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்ட மதிமுக சார்பில் சனிக்கிழமை இரவு போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சேலம் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் ஆ.ஆனந்தராஜ் தலைமை வகித்தார். புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வ.கோபால்ராசு வரவேற்றார்.
அப்போது விழா மேடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
மதுரை மாநாடு...
மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டுக்கு கிடைத்த மக்களின் ஆதரவை பார்த்து தமிழகத்தில் பல கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. இங்கே நான்கு கட்சிகள் சேர்ந்துள்ளன. இவை ஒன்றாக இருக்காது என கேலி பேசினர். ஆனால், ஆறு மாதங்களாக ஒற்றக்கருத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
ஒரே மாற்று சக்தி...
திமுக, அதிமுகவால் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. குறைந்த பட்ச செயல்திட்டத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் நலக் கூட்டணியால்தான் மதுவிலக்கை கொண்டுவர முடியும். தமிழகத்தின் ஒரே மாற்று சக்தி மக்கள் நலக் கூட்டணி.
ஊழல்...
ஜெயலலிதாவின் ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியாக அமைந்துள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையே உள்ளது. ஆயா வேலை முதல், அதிகாரி வேலை வரையில், பணம் கொடுத்தால் மட்டுமே எதுவும் நடக்கிறது.
எப்படி வெற்றியாகும்...
கடந்த, 2009, 2014-இல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றேன். நான் தோற்றதால், என் கொள்கை தோற்றுவிடவில்லை. பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கியிருக்கின்றனர். அதை வெற்றி என்று எப்படி கூற முடியும்.
தாதுமணல் கொள்ளை...
தமிழகத்தில், தாது மணல், கிரானைட் போன்ற கனிமவளங்கள், கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் பல லட்சம் டன் லோடுகளாக லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது. சுகன்திப்சிங்பேடி, சகாயம் ஆகியோரின் அறிக்கை என்ன ஆனது என்பதை இரு கட்சிகளும் தெளிவுப்படுத்தவில்லை.
மக்கள் சொத்துக்களாகும்....
இரண்டு ஆட்சிகளிலும் நடந்த ஊழல்கள் கண்டறியப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் மக்கள் சொத்துக்களாக மாற்றப்படும்.
கடன் தள்ளுபடி...
கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும். சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.