பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு அவமதிப்பு: வைகோ கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரின் விளக்கத்தை ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்த சம்பவம் கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா மங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

Vaiko condemns Ilayaraja stopped at Bengaluru airport

அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்கள் இருந்ததால், அவற்றை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரசாதப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்ல அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த இளையராஜா, பிரசாதப் பொருட்களை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்த அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள். தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை காலங்களைக் கடந்து ஒலிக்கும் பெருமைக்குரியது.

ஆசியக் கண்டத்தில் ஒரு ஜப்பானியனோ, சீனாக்காரனோ, கொரியாக்காரனோ சாதிக்க முடியாததை, சிம்பொனி இசை அமைத்து, அகிலத்தின் பல்வேறு இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர். அவர் சிறந்த கவிஞரும் கூட. அவரும், அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரசாதப் பொருட்களுடன் சென்னை பயணிக்க பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள், கோவில் பிரசாதப் பொருட்களை அனுமதிக்காததுடன், இளையராஜா அவர்களின் விளக்கத்தையும் ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.

அடக்க உணர்ச்சியும், உயர் பண்பு நலன்களும் கொண்ட இளையராஜா அவர்கள் சிம்பொனி இசையால் உலகமே மெச்சியபோது, இந்திய அரசுத் தொலைக்காட்சி, அந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்தது, ஒரு சாதனைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நாடாளுமன்றத்தில் குமுறலோடு உணர்வுகளைப் பதிவு செய்தவன் என்ற வகையில், பெங்களூரு விமான நிலைய சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+