உங்களுக்கு உழைக்க எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்... வைகோ
மதுரை: தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளரும், விருதுநகர் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் வைகோ, விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் மதுரை மாவட்டம் சிலைமானில் தனது தேர்தல் பிரச்சாரத்தை 4.30 மணிக்குத் தொடங்கினார்.
எல்.கே.டி நகரில் கூடியிருந்த வாக்காளர்களிடையே அவர் பேசியதாவது:
தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் வஞ்சனை செய்யும் ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். மோடி பிரதமராக வந்தால், தமிழர்களுக்கு நன்மை ஏற்படும்.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க பல ஆயிரம் கிலோ வெடி பொருட்களை கேரளா தயார் செய்து வைத்திருந்தது. மத்திய அரசு அதை ஏன் என்று கேட்கவில்லை.
முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நான் நடைபயணம் மேற்கொண்டேன். மதுவை ஒழிக்க பல ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டேன். பெண்கள் பலரும் எனக்கு வரவேற்பு கொடுத்தனர்.
குஜராத்தில் மதுக்கடைகள் இல்லை. மோடி ஆட்சி மத்தியில் அமையும் பட்சத்தில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும்.
உங்களுக்காக உழைக்க, தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள். நான் ஜாதி, மதம், கட்சி பேதம் பார்க்காமல் உழைப்பேன். எந்த நேரமும், என்னை யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைப்பவன் நான். எனவே எனக்கொரு வாய்ப்பு அளியுங்கள் என்றார்.
மேலும் அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ஐயா. ராமதாஸ், மதிமுக, இந்திய தேசியக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இது வலுவான கூட்டணி என்றும் வைகோ தெரிவித்தார்.
இன்று விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய வைகோ 21 இடங்களில் பேசுகிறார்.