சென்னை பேரணியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: வைகோ, வேல்முருகன் அஞ்சலி
சென்னை: சென்னையில் நடைபெற்ற சமூகநீதிப் பேரணியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வாலிபரின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுப்பதற்காக தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதையொட்டி நேற்று மாலை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குவிந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் வினோத் (வயது 21). என்பவரும் பேரணியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
பேரணிக்கு வந்த தொணடர்கள் சிலர் கிண்டி ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இரும்பு கம்பியில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகளை நடும் பணியில் ஈடுபட்டனர். வினோத்தும் தான் வைத்திருந்த கொடியை தண்டவாளத்தில் நடுவதற்காக கொண்டு சென்றார்.
கொடி கட்டியிருந்த இரும்பு கம்பியை வினோத் தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் கொடி கட்டிய கம்பி உரசியது. அப்போது மின்சார கம்பியில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
கொடி கம்பியில் மின்சாரம் பட்டதால் வினோத் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டார். அவரது உடல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து போலீஸ் மற்ற தொண்டர்களின் உதவியுடன் வினோத் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடலில் 76 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலையில் வினோத் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே இறந்த வினோத் குடும்பத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இதனிடையே உயிரிழந்த வினோத் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வினோத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.