மதிமுகவை இணையத்தில் விமர்சித்த கட்சி நிர்வாகிகள் இருவர் டிஸ்மிஸ்- லைக் போடுவோருக்கும் வைகோ வார்னிங்
மதிமுகவை இணைய தளங்களில் விமர்சித்த கட்சி நிர்வாகிகள் இருவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: மதிமுகவின் தலைமையை சமூக வலைதளங்களில் விமர்சித்த அக் கட்சியினர் இருவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, இணையதளங்களில் கட்சி முடிவுகளை விமர்சிப்பவர்கள் அதிமுகவின் ஒரு அணியின் மறைமுக ஆதரவாளர்களாக இயங்கும் ரகசியம் எனக்கு தெரியும் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கெளதமன் ஆகியோர் பொதுவெளியில் மதிமுகவின் முடிவுகளை விமர்சித்ததாக கூறி கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்தார்.
லைக் போடுபவர்களுக்கு...
அத்துடன் சமூக வலைதளங்களில் கட்சியை விமர்சிப்போரின் பதிவுகளை லைக் செய்பவர்களுக்கும் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இருவர் டிஸ்மிஸ்
கட்சி கட்டுப்பாட்டை மீறி, முகநூலில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதி வருகின்ற மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கௌதமன் ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றார்கள். தலைமைக் கழக அறிவிப்புகளைக் கண்டித்தும், அதனை எதிர்த்தும் முகநூலில் விமர்சனம் செய்பவர்கள்,
பொதுவெளியில் விமர்சிக்க கூடாது
கழகத்தின் உயர்நிலைக்குழுவில் ஆலோசித்துச் செயல்படுத்தப்படுகின்ற முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் கருத்துகளைப் பதிகின்றவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்களை விமர்சித்து முகநூலில் எழுதுபவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இணையதள வட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எழுதுகின்ற விமர்சனப் பதிவுகளை ஆதரிப்பவர்கள், அவ்வாறு நீக்கப்பட்டவர்களைக் கட்சி ஆதரவு இணையதளக் குழுக்களில் நிர்வாகிகளாக இணைத்து இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கருத்துகள் தெரிவிக்க...
கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கருத்துக் கூற விழைவோர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களிடம் நேரில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்; அல்லது, கடிதம் வழியாகப் பொதுச் செயலாளருக்குத் தலைமைக் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்; அல்லது, மின் அஞ்சல் ([email protected]) வழியாகவும் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.