கருப்பு பண ஒழிப்பு.. மோடியின் முயற்சிக்கு வைகோ ஆதரவு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளார் என்று வைகோ கூறியுள்ளார்.
கோவை: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: நாடெங்கும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் நடக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுகிறது. மக்கள்கியூவில் நிற்கிறார்கள் என்றெல்லாம் பெரும் பரபரப்பை கிளப்புகிறார்கள். ஆனால் ம.தி.மு.க., சரியானது என வரவேற்கிறோம். அழுத்தமாக ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி பதவி ஏற்கும் போது நாங்கள் கூட்டணியில் இருந்தோம். அவர் ராஜபக்சேவை பதவி ஏற்புக்கு அழைத்த போது எந்த ஒரு தலைவரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத் பவனுக்கு சென்று போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.
நியாயம் என்றால் வரவேற்பேன். தற்போது நரேந்திர மோடி வரவேற்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் மக்களுக்கு சிரமம் இருப்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான மக்கள் இந்த முயற்சியை வரவேற்பதாகத் கூறினார். 500, 1,000 ரூபாய் நோட்டு விவகாரத்தில், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், வைகோ பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications