காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜி.கே.வாசன் திட்டவட்டம்
விழுப்புரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் வாசன் பேசுகையில்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்து வியூகம் அமைத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசும் தேர்தல் வியூகம் அமைத்து வருகிறது. இந்த தேர்தலில் த.மா.கா. அமைக்கும் வியூகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
எக்காரணம் கொண்டும் வரும் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது. காங்கிரசுடனும் கூட்டணி கிடையாது. தமிழ் மாநில காங்கிரஸ் அதன் தனித்தன்மையை இழக்காது என்றார்.
இதன்மூலம் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலையை வாசன் எடுத்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையலாம் என்பதால் அந்தக் கூட்டணியில் வாசன் சேர வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேராத வரை அதிமுகவுடன் வாசன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அதிமுக- பாஜக கூட்டணி உருவானால், வாசன் மக்கள் நலக் கூட்டணி பக்கம் போக வாய்ப்புள்ளது.