எதிர்க்கட்சி காங்கிரஸா? திமுகவா? அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு..இங்கயே டேரா போட்டுட்டாரே..! திருமா அட்டாக்
சிதம்பரம்: காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக தான் எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயை டேரா போட்டு பிரச்சாரம் செய்கிறார் மோடி எனவும், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி முக ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர் என பிரச்சாரத்தில் பேசியுள்ளார் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் தமிழகத்தில் ஓய்கிறது, இதனையடுத்து தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று பு.முட்லூர் பகுதியில் விசிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்குசேகரிப்பை தொடங்கினார்.
ஸ்டாலினும் ராகுல் காந்தியும்: அப்போது பேசிய அவர்," இன்றும் நாளையும் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். இன்னும் சந்திக்க வேண்டிய கிராமங்கள் நிறைய உள்ளன. இந்த தேர்தல் வழக்கமாக தேர்தல் அல்ல. நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி முக ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவா எதிர்க்கட்சி: மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுக தான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். ராகுல்- மு.க.ஸ்டாலினால் தான் மோடியை வீழ்த்த முடியும். 40 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளராக இருக்கிறார்.
ஸ்டாலினின் வியூகம்: எனவே என்னை வெற்றி பெற செய்வதைவிட மு.க.ஸ்டாலினின் வியூகத்தை வெற்றி பெற செய்யுங்கள். கேஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். தேசிய அளவில் வியூகம் அமைத்து, எடப்பாடியையோ, அதிமுகவையோ எதிராகக் கருதாமல், தேசிய அளவில் பாஜகவை, மோடியை வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் 28 கட்சிகள் அடங்கிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி.
எண்கள் முக்கியமில்லை: அந்தக் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டது. எதிரணியில் 5 சீட் கிடைக்கும், திமுகவோடு இருந்தால் 2 தான் கிடைக்கும். எனவே அணி மாறுவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம்" என பேசினார்.












Click it and Unblock the Notifications